பத்ரிநாத் - குப்தகாசி - கேதர்நாத் - பகுதி 4

*


கிடைக்கும் வண்டியை கொண்டு சமோலி, கோபிஸ்வர், குந்ட் , குப்தகாசி , கௌரிகுந்த் வழியாக கேதர்நாத்தை அடையலாம் என்று எண்ணி சமோலி வரை செல்லும் மகேந்திரா வண்டியில் ஏறினேன் உத்ராஞ்சல் மலைகளில் இருக்கும் ஊர்களுக்கு செல்ல அதிகம்கிடைப்பது மகேந்திரா வண்டிகள்தான் தினபோக்குவரத்து பயன்பாட்டில் இதன் பங்கு இன்றியமையாததாக விளங்குகின்றது. அனைத்து இருக்கைகளும் ஆட்கள் கிடைத்தபிறகுதான் வண்டியை எடுப்பார்கள் சில சமயம் உடனே இருக்கைகளுக்கு ஆட்கள் வந்துவிடுவார்கள். இல்லை என்றால் ஆட்கள் கிடைக்கும் வரைவண்டியை எடுக்க மாட்டார்கள். ஒரு வழியாக ஜோஷிமத் வழியாக சமோலியை அடைந்து அடுத்து கோபிஸ்வர் வண்டிக்காக காத்திருக்கதொடங்கினேன்.

பிறகுதான் தெரிந்தது நேரமாகிவிட்டதால் கோபிஸ்வர் சென்றாலும் கௌரிகுந்த் செல்லும் வண்டியை பிடிக்க முடியாது என்று. வந்தவழியே செல்லாமல் புது வழியாக செல்லலாம் என்ற என் எண்ணம் நிறைவேறாமல் போக, அடுத்த வண்டியை பிடித்து நன்ட்ப்ரயாக்வழியாக கரன்பிரயாக் சென்றடைந்தேன். தெரியாத ஊர்களில் தனியா சுற்றுவதில் பயம் சிறிதும் இல்லை மாறாக மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. வரைபடம் இருந்ததால் வழிகள் அறிந்துகொள்வது சுலபமாக இருந்தது. டி.ஷர்ட், ஷார்ட்ஸ், தோலில் ஒரு பை, கையில் ஒரு தண்ணிர்பாட்டிலோடு கரன்பிரயாக்கில் திறிந்துகொண்டிருந்தேன். இந்த பயணம் முழுவதும் இதே கோலத்தில்தான் சுற்றிக்கொண்டிருந்தேன். ஒரு வழியாக ருத்ரபிரயாக் செல்லவண்டி கிடைத்து சிறிது நேரத்தில் ருத்ரபிரயாக்கை அடைந்தேன், ருத்ரபிரயாக் கொஞ்சம் பெரிய ஊர் அங்கு உணவை முடித்துக்கொண்டு அடுத்து குப்தகாசி வண்டியை பிடித்து குப்தகாசியை நோக்கி பயணித்தேன்.



தொலை தூர ஊர்களுக்கு நேரடியாக வண்டிகள் அதிகம் இல்லை மாறிதான் செல்லவேண்டி இருந்தது என் கோலத்தை பார்த்து பக்கத்தில் அமர்ந்திருந்தவர் எங்கு இருந்து வறிங்க என்று வினவ, நான் பத்ரியில் இருந்து வருகின்றேன் என்று கூற, என்ன எல்லாம் யமுநோதரி, கங்கோதரி, கேதர்நாத், பத்ரிநாத்ன்னு போவாங்க நீங்க பத்ரில இருந்து எதிர்வரிசையில் ஆரம்பிசிருகிங்க என்று சிரித்துக்கொண்டேகேட்டார், எனக்கு அந்த வரிசை முறை எல்லாம் தெரியாது என்று கூறி, அடுத்து கேதர்நாத் செல்லவேண்டும் எங்கு தங்கலாம் கௌரிகுந்தில் அறை கிடைக்குமா என்று கேட்க, அவர் கூட்டம் அதிகமாக இருக்கும் அறை கிடைக்கலனா சிரமமா போய்டும் அதனால குப்தகாசியிலேயே தங்கிடுங்க ஊரும் கொஞ்சம் பெரிய ஊர் என்றார், பேசிக்கொண்டிருக்கும் பொழுதே குந்ட் என்ற இடத்தில் வண்டி நின்றது மூன்று சாலைகள் பிரிந்தன ஒன்று கோபிஸ்வர் செல்ல அடுத்து குப்தாகாசி செல்ல மற்றொன்று நான் ருட்ரப்பியாகில் இருந்து வந்தபாதை, கோபிஸ்வர் வழியாக வந்தால் இங்கு தான் வந்து சேரும் என்று எண்ணிக்கொண்டேன் அதையே அரிகில் இருப்பவரிடம் கேட்டு உறுதிபடுத்திக்கொண்டேன்.



(குப்தகாசி)

குப்தகாசி வருவதற்குள் நான்குமணி இருக்கும் அறை தேடி திரும்ப அலைய தொடங்கினேன் ஒன்று அல்லது இரண்டு இடத்தில் மட்டும் அறை இருப்பதாக கூறினர் ஆனால் தனியாக வந்ததை அறிந்து கொடுக்கமறுத்துவிட்டனர் அதற்கான காரணம் அப்பொழுது தெரியவில்லை, ஏன் தனியா வந்தா கொடுக்கமாட்டேன்கிறாங்க என்று யோசித்துக்கொண்டே ஒரு நுழைவாயிலை கடந்து மேடான பகுதியை நோக்கி நடக்க தொடங்கினேன். சில நூறு மீட்டர் கடந்தவுடன் ஒரு கோவில் வந்தது அதை கடந்து ஒரு விடுதியை அடைந்தேன் பேருந்து நிறுத்தத்தில் தேநீர் அருந்தும் பொழுது இந்த விடுதியை பற்றி அந்த கடைக்காரர் கூறினார். அங்கு முதலில் அறை இல்லை என்று கூறினாலும் பிறகு ஆறுமணிக்கு மேல் வாருங்கள் எங்கள் மக்கள் யாரும் வரவில்லை என்றால் உங்களுக்கு (அவர்கள் மாநிலத்து மக்கள்) அறை தருகிறோம் என்று கூறினார், அறை கிடைக்கும் என்ற நம்பிக்கை முழுவதுமாக எனக்கு வந்திருந்தது, பொழுதை கழிக்கத்தான் வழியில் இருந்த காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றேன், கோவிலுக்குள் நுழைந்தவுடம் ஒரு சிறிய குளம் படிகட்டின் வழியாக இறங்கினால் இரு பக்கத்திலும் காளை மற்றும் ஆட்டு தலை போன்ற உருவத்தின் வாயிலிருந்து நீர் வந்துகொண்டிருந்தது சிறு நிறுத்தம் கூட இல்லாமல்.







எங்கிருந்து நீர் வருகிறது என்று யாருக்கும் தெரியவில்லை ஒன்று கங்கை என்றும் மற்றொன்று யமுனை என்றும் அங்கிருந்தவர்கள் கூறினர் ஏதோ குழாய்வைத்து தண்ணீர் விடுவது போல் இருந்தது ஆனால் இயற்கையாகவே வருகிறது என்று அங்கிருந்தவர் கூறினார் குடிப்பதற்கு அந்த நீரை எடுத்து சென்றுகொண்டிருந்தனர். கேதர்நாத் கோவில் கட்டபட்டபொழுது இந்த கோவிலும் கட்டப்பட்டது என்றுவெளியில் இருந்த கடைகாரர் கூறினார். எனக்கு அந்த கோவிலை பற்றி எதுவும் தெரியாது என்பதால் அணைத்திருக்கும் தலையைஆட்டினேன். ஆனால் அடுத்தடுத்த கேதர் பயணங்களில் குப்தகாசி கோவிலுக்கு செல்வதை கட்டாயமாக்கி கொண்டேன். அந்த வழிப்போக்கரினால்தான் குப்தகாசி கோவிலை பார்க்க வாய்ப்பு கிடைத்ததாக நினைத்துக்கொண்டேன் இன்னும் நேரம் இருந்ததால் கௌரிகுந்த் செல்லும் சாலையில் நடக்க தொடங்கினேன் ஊரை விட்டு இருநூறு மீட்டருக்குள் ஒரு மரத்தின் அருகில் சாலையின் ஓரத்தில் அமர்ந்துகொண்டேன் காரணம் அதற்கடுத்து இருந்த பள்ளத்தாக்கு, மாலை வேலை அழகான சூழல் அமையான இடம் துணைக்கு சில மேகங்கள், இதமான குளிர் என்று சிறிது நேரம் கடந்தது அடுத்த முறை சென்றபொழுதும் அந்த இடத்திற்கு சென்றதாக நினைவு, அமர்ந்து சிறிது நேரத்திலேயே நான் எங்கோ தூர தேசத்தில் சொர்கத்தின் எதிரில் அமர்ந்திருந்ததாக எண்ணிக்கொண்டேன். எதிரே தூரத்தில் சிறு கோடு போல சாலைகள் அதில் விளையாட்டு பொருட்கள் போல வண்டிகள், சொல்லாமல் வந்து அதனை மறைக்கும் மேகங்கள் சிறிது நேரத்தில் மீண்டும் தெளிந்த காட்சி என்று நேரம் கடந்தது, ஏதோ பெரியதாக சாதித்துவிட்டதாக நினைத்துக்கொண்டேன் அல்லது இத்தனை அழகான இயற்க்கையை பார்த்ததில் ஒரு மனநிறைவு.

இருட்டதொடங்கியவுடன் நேராக விடுதிக்கு செல்ல அவர்கள் தங்குவதற்கு ஏதாவது ஒரு அடையாள அட்டை கேட்டனர், நான் ஒருஅட்டையை கொடுக்க அரசாங்க அட்டைதான் வேண்டும் என்று கூறிவிட்டனர் பிறகு நான் என் வருமானவரி அட்டையை (பான் அட்டை) கொடுக்க, அறையை காலி செய்யும் பொழுது திரும்பிவாங்கி கொள்ளலாம் என்று கூறினர், முதலில் கொடுத்த அறை சரியில்லாததால் வேறு அறை கேட்க வாடகை அதிகம் ஆகும் என்று கூறினர் பரவாயில்லை என்று வேறு அறையை எடுத்துக்கொண்டேன், விடியற்காலையிலேயே எழவேண்டும் எண்ணம் அடிகடி வந்து சென்றது விடியற்காலையில் எழுந்து கிளம்பி முதல்வண்டியை பிடிக்க சென்றேன் சாவி ஒப்படைக்கும் பொழுது என்னுடைய வருமானவரி அட்டையை வாங்கிக்கொண்டு பேருந்துநிறுத்தத்தை நோக்கி நடக்கத்தொடங்கினேன். என்னை போல பலரும் அந்த வண்டிக்காக காத்திருந்தனர், வண்டி கிளம்பி பாதி தூரம்செல்வதற்குள் வாகன நெரிசலில் சிக்கிகொண்டது. வெகுநேரம் சென்றும் வாகன நெரிசல் தீராததால் அருகில் இருந்த கடைக்கு சென்று தேநீர் அருந்த தொடங்கிநோம். வெகு நேரம் கழித்து சிறிது சிறிதாக வண்டி நகர்ந்தது.

ராம்பூரை கடந்து சோன்பிரயாக் வரை வண்டி ஊர்ந்து சென்றது சோன்பிரயாகை கடந்து சில நிமிடங்களில் இதற்க்கு மேல் போகாது இங்கயே இறங்கிகொள்ளுங்கள் என்று ஓட்டுனர் கூற இறங்கி நடக்கத்தொடங்கினேன். வழி எங்கும் வரிசையாக வாகனங்கள் பெரும்பாலான மக்கள் வாகனங்களை விட்டு இறங்கி சாலையில் நின்றுகொண்டிருந்தனர். ஒரு சோதனை சாவடி இருந்தது மேலிருந்து வரும் வண்டிகளை மட்டும் தான் விட்டு கொண்டிருந்தனர் நெரிசலை தவர்க்க குறிப்பிட்ட நேரம் இப்படி செய்வார்கள் என்று கூறினார்கள். ஆனால் நடந்து போக தடை இல்லை.

தனியாக கௌரிகுந்தை நோக்கி நடக்க தொடங்கினேன் அடர்ந்த மரங்கள் சாலையில் ஒரு புறம் சிறிய ஆறு ஓடிகொண்டிருந்தது, ஒரு சிறு பாலத்தை கடக்கும் பொழுது ஆற்று தண்ணீரின் ஓசை மட்டுமே கேட்டது பிறகு பறவைகளின் ஓசை என்று தனிமையில் ரசித்துக்கொண்டே நடக்கத்தொடங்கினேன், கண்ணுக்கெட்டும் தூரம் வரை முன்னும் பின்னும் ஆள்நடமாட்டம் இல்லை. ஏதாவது வனவிலங்கு வந்துவிட்டாள் என்ன செய்வது என்று உள்ளுக்குள்தோன சமாளித்துக்கொள்ளலாம் என்று மனம் சமாதானம் செய்தது மூன்று நான்கு கி.மீ க்கு மேல நடந்திருப்பேன் பிறகு ஒரு வண்டி வந்தது கைகாட்டி நிறுத்த சில நிமிடங்களிலேயே கௌரிகுந்த்தை அடைந்தோம். அடுத்து பதினான்கு கி.மீ நடைபயணம் செய்யவேண்டும் செய்தால் கேதர்ரை சந்திக்கலாம். கேதர் செல்வதற்கு விநாயகர் ஒரு வாயிலில் அமர்ந்து வரவேற்றார் நான் அவரை நோக்கி நடக்கத்தொடங்கினேன்.

தேடல் தொடரும்....


குறிப்பு : புகைப்படங்கள் அனைத்தும் மூன்றாவதுமுறை சென்றபொழுது எடுத்தது

பத்ரிநாத் - குப்தகாசி - கேதர்நாத் - பகுதி 3

*


சமோலி சென்று வண்டி மாறி செல்லுங்கள் என்று பலர் கூற ஏனோ அப்படி போக தோணவில்லை, ஒரு நாள் பத்ரியில் தங்கிவிட்டு போகலாம் என்று முடிவுக்கு வந்து விடுதிஅறை தேட ஆரம்பித்தேன், ஆனால் நினைத்தது போல் எங்கும் அறை காலி இல்லை என்ற வசனம்தான், நடப்பது நடக்கட்டும் என்று பனி படர்ந்த மலையை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டேன் அது பத்ரிநாத் கோவிலுக்கு பின்புறம் அமைந்திருந்தது, சிறுது தூரத்திற்கு பிறகு சிறு சிறு குகைகள் சிறிய கோவில்களை பார்க்க முடிந்தது. அதிக மனித நடமாட்டம் கிடையாது. ஒரு சிலர் எதிரே தென்பட்டனர் ஒருவரும் மலைக்கு சென்றிருக்க வாய்ப்பில்லை என்று எண்ணிக்கொண்டேன்.


மலைக்கு ஏறுவதற்கு இடப்பக்கம் பெரிய பனிப்பாறை போன்று ஒரு கி.மீ மேல் பறந்து விரிந்து கிடந்தது. முதல் முறை பார்த்ததால் வித்தியாசமாக இருந்தது அங்கேயே கரையில் நின்றுவிட்டேன். அருகில் இருவர் இருந்தனர் அந்த பனி பாறை தொடங்கும் இடத்தை பார்க்க எண்ணி மலைஇருக்கும் திசையை நோக்கி பார்க்க கன்னுகெட்டும் தூரம் வரை அது பறந்து விரிந்து கிடந்தது. பணிகட்டிமேல் இறங்கி நடக்கலாமா என்று யோசித்துகொண்டிருக்கையில் அருகில் இருந்த இருவரில் ஒருவர் முதலில் ஒரு குச்சியையும் பிறகு ஒரு காலையும் வைத்து தட்டி பார்த்து இறங்க தொடங்கினார். துணைக்கு ஒருவர் கிடைக்க நானும் கட கட என்று கீழே இறங்கினேன், என்னை தொடர்ந்து முதலில் இறங்கியவரின் நண்பரும் இறங்கினார். முழங்காலுக்கு மேல் இருக்கும் பனிகட்டியின் உயரம் அதன் அடியில் ஊற்று போல தண்ணீர் ஓடிகொண்டிருந்தது. கையில் கொண்டு சென்ற குச்சியை கொண்டு பணிகட்டியில் கிறுக்க தொடங்கினேன் தமிழ் என்று சரியாக தெளிவில்லாமல் கிறுகிருந்தேன்.




இறங்குவதற்கு முன்பணிகட்டிகளின் மீது எறிந்திருந்த சிறுகற்கள் ஆங்காங்கு சிறு துளையை ஏற்படுத்தி பாதி வெளியே தெரிவது போல் இருந்தது அதில் ஒரு கல்லை எடுத்து பெரியதாக தமிழ் என்று எழுதினேன், அதை பார்த்து அருகில் இருந்தவர் என்ன எழுதிருகிங்க என்று கேட்க, அவருக்கு பதில் சொல்லிக்கொண்டே சிறுகுழந்தை போல பணிகட்டியில் சறுக்கி விளையாட தொடங்கினேன் என்னை பார்த்த அவர்கள் இருவரும் சறுக்கி விளையாட தொடங்கினார்கள், ஒருவருக்கு முப்பதைந்திருக்கும் இன்னொருவருக்கு நாற்பது வயதிருக்கும்.

( அடுத்த முறை சென்றபொழுது அங்கு பனிபாறைகள் இல்லை ஒரு ஆறு ஓடிகொண்டிருந்தது முதல்முறை சென்றபொழுது அதன் மீதுதான் விளையாடிகொண்டிருந்தேன் என்று நினைக்க சிலிர்ப்பாக இருந்தது, கொஞ்சம் பனிப்பாறை கரைந்திருந்தாலும் முதல் முறையே சிவலோகத்தை பார்த்திருப்பேன்)

சிறிது நேர விளையாட்டுக்கு பின் மீண்டும் மேலே ஏற தொடங்கினேன் அதற்குள் அவர்கள் இருவரிடமும் நல்ல அறிமுகம் கிடைத்துவிட்டது ஒருவர் மட்டும் புதிதாக வந்திருப்பதாகவும் அடுத்தவர் ஒவ்வொரு வருடமும் வந்து ஒருமாதம் தங்கிருந்துவிட்டு செல்வதாகவும் கூறினார். நேரம் போனது தெரியாமல் அங்கேயே சில மணிநேரம் இருந்திருக்க கூடும் இறுதியாக திரும்பும் பொழுது அவர்கள் எங்க தங்கிருகிங்க என்று வினவ இன்னும் அறை கிடைக்கவில்லை போய்த்தான் தேடனும் என்று கூறினேன், அறை கிடைப்பது கடினம் என்று கூறினார் பத்ரிநாத்தை நன்கு தெரிந்த அவர். சிறிது நேரத்திலேயே உங்களுக்கு விருப்பம் இருந்தால் எங்களுடனே தங்கலாம் ஒரு மடத்துக்கு சொந்தமான இடத்தில் தான் தங்கிருக்கிறோம் என்றார்.

சில மணிநேர பழக்கம்தான் என்றாலும் பெரியதாக நான் யோசிக்கவில்லை உடனே ஒப்புக்கொண்டேன் மடம் என்பதால் எதுவும் பிரச்சனை இருக்காது என்று என் மனம் என்னிருக்கலாம். வாடகை எவ்வளவு என்று கேட்க ச்சே ச்சே அது எல்லாம் இல்லை என்றார்.




கீழே இறங்கி கோவிலுக்கு அருகில் ஒரு பாலத்தின் தொடக்கத்தில் சிறிது நேரம் அமர்ந்தோம் பல காவிவுடை சாமியார்கள் கடந்து சென்றுகொண்டிருந்தனர், அங்கு அமர்ந்துகொண்டே சுற்றிலும் இருந்த மலைகளை பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு ஒரு மடத்திருக்கு கூட்டிசென்றனர் அங்கு ஒரு சாமியார் அங்கு நின்றுகொண்டிருந்த மற்ற சாமியார்களுக்கு எதோ ஒரு சீட்டை கொடுத்துகொண்டிருந்தார், உணவு உண்பதற்காக இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன் என்னை அவர்கள் கூட்டிக்கொண்டு அந்த மடத்தின் தலைமை சாமியார் அறைக்கு சென்றனர், அந்த அறை முழுவதும் கடவுளின் படங்கள் அவர்கள் இருவரும் வயதான சாமியாரின் காலில் விழுந்து ஆசி வாங்கினார் பிறகு தரையில் அமர்ந்தனர், சாமியாரும் தரையில் அமர்ந்தார் நானும் அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டேன் அவர்கள் பேசிகொண்டிருகையிலே இன்னொரு சாமியார் அந்த அறைக்கு வந்து என்னருகில் அமர்ந்தார் நிறைய ருட்ராக்ஷ்மாலை அணிதிருந்தார். எப்படி நல்ல ருட்ராக்ஷத்தை கண்டறிவது என்று என்னருகில் வந்தமர்ந்த சாமியாரிடம் கேட்க நீரில் மூழ்கினால் நல்லது மிதந்தால் போலி என்று கூறினர். எங்கிருந்து ருத்ராக்ஷம் வருகிறது என்று கேட்க நேப்பாளிலிருந்து வருகிறது என்று கூறினார். எனக்கு ஒரு ருத்ராக்ஷம் வேணும் என்று கூற நாளை காலை வா கண்டிப்பாக வாங்கி வைக்கிறேன் என்று கூறினார். ஆனால் போதையூட்டும் தண்ணீர், அசைவம் கூடவே கூடாது என்றார் ஏற்கனவே அவைகளை தொடுவதில்லை என்று கூற புன்னகை அவரிடம் இருந்து வந்தது.அது கொஞ்சம் பெரிய மடமாக இருந்ததால் அங்கு தான் தங்கபோகிறோம் என்று என்னிருந்தேன் ஆனால் அங்கிருத்து வேறு ஒரு இடத்துக்கு கூட்டிசென்றனர்.


கொஞ்சம் உயரமான பகுதியில் அமைந்த ஒரு வீட்டுக் கூட்டிசென்றனர். அங்கு ஒரு வயதான துறவி இருந்தார், என்னை பற்றி கூட்டிசென்றவர் அவரிடம் சொல்ல, சிரித்துக்கொண்டே தாராளமாக தங்கிக்கோ ஒரு உருளைகிழங்கு கொஞ்சம் கோதுமை மாவுதான் கூட போடபோறேன் வேறு ஒன்னும் பெருசா நா செய்யபோறது இல்ல என்று புன்னகையுடன் கூறினார். அந்த வீட்டில் பாதி பூசை அறைதான் இருந்தது. சிறிது நேரத்திலேயே கடவுள் சிலைகள் மற்றும் பூசை அறையை சுத்தம் செய்து விளக்கேற்றி உடுக்கை அடித்து பூசையை தொடங்கினார் ஒரு மணிநேரத்துக்கு மேல் வழிபாடு தொடர்ந்தது அனைத்து இந்து கடவுள்களும் அங்கு இருந்தது. பூசை முடிந்ததும் திருநீறு கொடுத்தார். பிறகு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். கைலாயத்துக்கு செல்ல கடுவுசீடு, குடியுரிமை பற்றி தெரியாமல் உத்ராஞ்சல் எல்லை வரை சென்று திருப்பி அனுப்பப்பட்ட நிகழ்ச்சியை கூறினார்.



சிறிது நேரத்திலேயே என்னை கூட்டிவந்தவர் சமையலுக்கு வேண்டிய உதவிகள் செய்ய சப்பாத்தியும், உருளைக்கிழங்கு குருமாவும் செய்து கொடுத்தார். உணவு முடித்த பின் நன்கு இருடிருந்தது. அந்த வீட்டுக்கு ஒட்டியே இன்னொரு வீடு இருந்தது அந்த வீட்டில்தான் தங்க போகிறோம் என்றார், மூன்று நான்கு கட்டில்கள்இருந்தது கம்பளி போர்வைகள் ஏராளமாக இருந்தது. எங்கு விருப்பமோ அங்கு படுத்துக்குங்க என்று கூறினார் கூட்டிசென்றவர். ஒரு கட்டிலில் படுத்து மூன்று கம்பளிகள் போர்த்தியபிறகுதான் குளிர் அடங்கியது போல் இருந்தது எங்காவது விடுதியில் அறை கிடைத்திருந்தாலும் இத்தனை வசதி இருந்திருக்காது என்று மனம் கூறியது. நால்ல உறக்கம். லேசான குளிர் இருந்துகொண்டே இருந்தது உடம்பின் சூடு அதை தணிக்கும் பொருட்டு இருந்தது ஒரு புதுவிதமான உணர்வு உணரமுடிந்தது.

காலை வண்டிக்கு செல்லும் பொருட்டு விடியற்காலையிலேயே என்னை எழுப்பிவிட்டனர். வெளியில் வந்து வலது புறம் திரும்பி பனிபடர்ந்த மலையைகாண என்னையறியாமல் என் இருகரங்களும் தலைமேல் கூப்பி வணங்கியது. அனைவருக்கும் அந்த மலையை காணும் பொழுது அப்படிதான் தோனுமா என்று தெரியவில்லை ஆனால் எனக்கு பின்பு வந்த இருவரும் அவ்வாறே செய்தனர்.

காலையில் புறப்பட தயாராகியபிறகு அந்த வயதான பெண்துறவியின் வீடிற்கு சென்றோம் சிறிது நேரம் தரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம் அவர் எனக்கு முன்பு தரையில் அமர்ந்திருந்தார், கிளம்பும் முன் அமர்ந்தவாறே அவரின் காலுக்கு நேராக குனியவும், மாதாஜிகிட்ட ஆசி வாங்கிக்கோ என்று என்னை கூறிவந்தவர் சொல்லவும் சரியாக இருந்தது. என் வாழ்க்கையில் இரண்டாவது முறை காலில்விழுந்து ஆசி வாங்கியது அன்றுதான் (முதல் முறை என் அன்னையிடம் பதினைந்து வயதில் ஆசி வாங்கினேன்). என் முதிகில் கைவைத்து இரண்டு மூன்று முறை தட்டி எதோ கூறினார், நல்லருன்னுதான் சொல்லிருப்பார் என்று எண்ணிக்கொண்டேன். ( அங்கு அனைவரும் முதுகில் தட்டிதான் ஆசி வழங்குகிறார்கள்). துறவியிடம் ஆசி வாங்கினால் நல்லது என்று எல்லாம் எண்ணி காலில் விழவில்லை, ஊர் பேர் தெரியாத என்னக்கு ஒரு நாள் தங்க இடம் கொடுத்து ஒரு வேலை உணவு கொடுத்த அந்த மனது என்னை காலில் விழவைத்தது.

பிறகு நேராக கரம்குந்த்துக்கு சென்று நீராடிவிட்டு கோவிலுக்கு செல்லலாம் என்று என்ன நீண்ட வரிசை கண்ணுக்கு தென்பட அப்படியே கிளம்புவதாக அவர்களிடம் கூறிவிட்டு பேருந்துநிலையத்தை நோக்கி நடக்கத்தொடங்கினேன், அவர்கள் இருவரும் கோவிலுக்கு சென்றனர், எனக்கு பெரும்உதவி செய்தவருக்கு நன்றி என்று கூறினேன் அது பத்தாது என்று என் மனம் கூறினாலும் வேறு என்ன சொல்வது என்று அப்பொழுது தெரியவில்லை. எனக்கு அவர் உதவி செய்தது இறையின் செயல்தான் என்று என் மனம் எண்ணிக்கொண்டது, இந்த முறை கேதர்நாத் செல்லும்வண்டி நிரம்பிவிட்டதால் சீக்கிரம் எடுத்துவிட்டனர். வேறுவழியில்லாமல் எப்படியாவது இன்று செல்லவேண்டும் என்று வரைபடத்தை எடுத்து பார்க்க தொடங்கினேன்.


தேடல் தொடரும்...

குறிப்பு : புகைப்படங்கள் அனைத்தும் இரண்டாவதுமுறை சென்றபொழுது எடுத்தது