பத்ரிநாத் - குப்தகாசி - கேதர்நாத் - பகுதி 4

*


கிடைக்கும் வண்டியை கொண்டு சமோலி, கோபிஸ்வர், குந்ட் , குப்தகாசி , கௌரிகுந்த் வழியாக கேதர்நாத்தை அடையலாம் என்று எண்ணி சமோலி வரை செல்லும் மகேந்திரா வண்டியில் ஏறினேன் உத்ராஞ்சல் மலைகளில் இருக்கும் ஊர்களுக்கு செல்ல அதிகம்கிடைப்பது மகேந்திரா வண்டிகள்தான் தினபோக்குவரத்து பயன்பாட்டில் இதன் பங்கு இன்றியமையாததாக விளங்குகின்றது. அனைத்து இருக்கைகளும் ஆட்கள் கிடைத்தபிறகுதான் வண்டியை எடுப்பார்கள் சில சமயம் உடனே இருக்கைகளுக்கு ஆட்கள் வந்துவிடுவார்கள். இல்லை என்றால் ஆட்கள் கிடைக்கும் வரைவண்டியை எடுக்க மாட்டார்கள். ஒரு வழியாக ஜோஷிமத் வழியாக சமோலியை அடைந்து அடுத்து கோபிஸ்வர் வண்டிக்காக காத்திருக்கதொடங்கினேன்.

பிறகுதான் தெரிந்தது நேரமாகிவிட்டதால் கோபிஸ்வர் சென்றாலும் கௌரிகுந்த் செல்லும் வண்டியை பிடிக்க முடியாது என்று. வந்தவழியே செல்லாமல் புது வழியாக செல்லலாம் என்ற என் எண்ணம் நிறைவேறாமல் போக, அடுத்த வண்டியை பிடித்து நன்ட்ப்ரயாக்வழியாக கரன்பிரயாக் சென்றடைந்தேன். தெரியாத ஊர்களில் தனியா சுற்றுவதில் பயம் சிறிதும் இல்லை மாறாக மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. வரைபடம் இருந்ததால் வழிகள் அறிந்துகொள்வது சுலபமாக இருந்தது. டி.ஷர்ட், ஷார்ட்ஸ், தோலில் ஒரு பை, கையில் ஒரு தண்ணிர்பாட்டிலோடு கரன்பிரயாக்கில் திறிந்துகொண்டிருந்தேன். இந்த பயணம் முழுவதும் இதே கோலத்தில்தான் சுற்றிக்கொண்டிருந்தேன். ஒரு வழியாக ருத்ரபிரயாக் செல்லவண்டி கிடைத்து சிறிது நேரத்தில் ருத்ரபிரயாக்கை அடைந்தேன், ருத்ரபிரயாக் கொஞ்சம் பெரிய ஊர் அங்கு உணவை முடித்துக்கொண்டு அடுத்து குப்தகாசி வண்டியை பிடித்து குப்தகாசியை நோக்கி பயணித்தேன்.



தொலை தூர ஊர்களுக்கு நேரடியாக வண்டிகள் அதிகம் இல்லை மாறிதான் செல்லவேண்டி இருந்தது என் கோலத்தை பார்த்து பக்கத்தில் அமர்ந்திருந்தவர் எங்கு இருந்து வறிங்க என்று வினவ, நான் பத்ரியில் இருந்து வருகின்றேன் என்று கூற, என்ன எல்லாம் யமுநோதரி, கங்கோதரி, கேதர்நாத், பத்ரிநாத்ன்னு போவாங்க நீங்க பத்ரில இருந்து எதிர்வரிசையில் ஆரம்பிசிருகிங்க என்று சிரித்துக்கொண்டேகேட்டார், எனக்கு அந்த வரிசை முறை எல்லாம் தெரியாது என்று கூறி, அடுத்து கேதர்நாத் செல்லவேண்டும் எங்கு தங்கலாம் கௌரிகுந்தில் அறை கிடைக்குமா என்று கேட்க, அவர் கூட்டம் அதிகமாக இருக்கும் அறை கிடைக்கலனா சிரமமா போய்டும் அதனால குப்தகாசியிலேயே தங்கிடுங்க ஊரும் கொஞ்சம் பெரிய ஊர் என்றார், பேசிக்கொண்டிருக்கும் பொழுதே குந்ட் என்ற இடத்தில் வண்டி நின்றது மூன்று சாலைகள் பிரிந்தன ஒன்று கோபிஸ்வர் செல்ல அடுத்து குப்தாகாசி செல்ல மற்றொன்று நான் ருட்ரப்பியாகில் இருந்து வந்தபாதை, கோபிஸ்வர் வழியாக வந்தால் இங்கு தான் வந்து சேரும் என்று எண்ணிக்கொண்டேன் அதையே அரிகில் இருப்பவரிடம் கேட்டு உறுதிபடுத்திக்கொண்டேன்.



(குப்தகாசி)

குப்தகாசி வருவதற்குள் நான்குமணி இருக்கும் அறை தேடி திரும்ப அலைய தொடங்கினேன் ஒன்று அல்லது இரண்டு இடத்தில் மட்டும் அறை இருப்பதாக கூறினர் ஆனால் தனியாக வந்ததை அறிந்து கொடுக்கமறுத்துவிட்டனர் அதற்கான காரணம் அப்பொழுது தெரியவில்லை, ஏன் தனியா வந்தா கொடுக்கமாட்டேன்கிறாங்க என்று யோசித்துக்கொண்டே ஒரு நுழைவாயிலை கடந்து மேடான பகுதியை நோக்கி நடக்க தொடங்கினேன். சில நூறு மீட்டர் கடந்தவுடன் ஒரு கோவில் வந்தது அதை கடந்து ஒரு விடுதியை அடைந்தேன் பேருந்து நிறுத்தத்தில் தேநீர் அருந்தும் பொழுது இந்த விடுதியை பற்றி அந்த கடைக்காரர் கூறினார். அங்கு முதலில் அறை இல்லை என்று கூறினாலும் பிறகு ஆறுமணிக்கு மேல் வாருங்கள் எங்கள் மக்கள் யாரும் வரவில்லை என்றால் உங்களுக்கு (அவர்கள் மாநிலத்து மக்கள்) அறை தருகிறோம் என்று கூறினார், அறை கிடைக்கும் என்ற நம்பிக்கை முழுவதுமாக எனக்கு வந்திருந்தது, பொழுதை கழிக்கத்தான் வழியில் இருந்த காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றேன், கோவிலுக்குள் நுழைந்தவுடம் ஒரு சிறிய குளம் படிகட்டின் வழியாக இறங்கினால் இரு பக்கத்திலும் காளை மற்றும் ஆட்டு தலை போன்ற உருவத்தின் வாயிலிருந்து நீர் வந்துகொண்டிருந்தது சிறு நிறுத்தம் கூட இல்லாமல்.







எங்கிருந்து நீர் வருகிறது என்று யாருக்கும் தெரியவில்லை ஒன்று கங்கை என்றும் மற்றொன்று யமுனை என்றும் அங்கிருந்தவர்கள் கூறினர் ஏதோ குழாய்வைத்து தண்ணீர் விடுவது போல் இருந்தது ஆனால் இயற்கையாகவே வருகிறது என்று அங்கிருந்தவர் கூறினார் குடிப்பதற்கு அந்த நீரை எடுத்து சென்றுகொண்டிருந்தனர். கேதர்நாத் கோவில் கட்டபட்டபொழுது இந்த கோவிலும் கட்டப்பட்டது என்றுவெளியில் இருந்த கடைகாரர் கூறினார். எனக்கு அந்த கோவிலை பற்றி எதுவும் தெரியாது என்பதால் அணைத்திருக்கும் தலையைஆட்டினேன். ஆனால் அடுத்தடுத்த கேதர் பயணங்களில் குப்தகாசி கோவிலுக்கு செல்வதை கட்டாயமாக்கி கொண்டேன். அந்த வழிப்போக்கரினால்தான் குப்தகாசி கோவிலை பார்க்க வாய்ப்பு கிடைத்ததாக நினைத்துக்கொண்டேன் இன்னும் நேரம் இருந்ததால் கௌரிகுந்த் செல்லும் சாலையில் நடக்க தொடங்கினேன் ஊரை விட்டு இருநூறு மீட்டருக்குள் ஒரு மரத்தின் அருகில் சாலையின் ஓரத்தில் அமர்ந்துகொண்டேன் காரணம் அதற்கடுத்து இருந்த பள்ளத்தாக்கு, மாலை வேலை அழகான சூழல் அமையான இடம் துணைக்கு சில மேகங்கள், இதமான குளிர் என்று சிறிது நேரம் கடந்தது அடுத்த முறை சென்றபொழுதும் அந்த இடத்திற்கு சென்றதாக நினைவு, அமர்ந்து சிறிது நேரத்திலேயே நான் எங்கோ தூர தேசத்தில் சொர்கத்தின் எதிரில் அமர்ந்திருந்ததாக எண்ணிக்கொண்டேன். எதிரே தூரத்தில் சிறு கோடு போல சாலைகள் அதில் விளையாட்டு பொருட்கள் போல வண்டிகள், சொல்லாமல் வந்து அதனை மறைக்கும் மேகங்கள் சிறிது நேரத்தில் மீண்டும் தெளிந்த காட்சி என்று நேரம் கடந்தது, ஏதோ பெரியதாக சாதித்துவிட்டதாக நினைத்துக்கொண்டேன் அல்லது இத்தனை அழகான இயற்க்கையை பார்த்ததில் ஒரு மனநிறைவு.

இருட்டதொடங்கியவுடன் நேராக விடுதிக்கு செல்ல அவர்கள் தங்குவதற்கு ஏதாவது ஒரு அடையாள அட்டை கேட்டனர், நான் ஒருஅட்டையை கொடுக்க அரசாங்க அட்டைதான் வேண்டும் என்று கூறிவிட்டனர் பிறகு நான் என் வருமானவரி அட்டையை (பான் அட்டை) கொடுக்க, அறையை காலி செய்யும் பொழுது திரும்பிவாங்கி கொள்ளலாம் என்று கூறினர், முதலில் கொடுத்த அறை சரியில்லாததால் வேறு அறை கேட்க வாடகை அதிகம் ஆகும் என்று கூறினர் பரவாயில்லை என்று வேறு அறையை எடுத்துக்கொண்டேன், விடியற்காலையிலேயே எழவேண்டும் எண்ணம் அடிகடி வந்து சென்றது விடியற்காலையில் எழுந்து கிளம்பி முதல்வண்டியை பிடிக்க சென்றேன் சாவி ஒப்படைக்கும் பொழுது என்னுடைய வருமானவரி அட்டையை வாங்கிக்கொண்டு பேருந்துநிறுத்தத்தை நோக்கி நடக்கத்தொடங்கினேன். என்னை போல பலரும் அந்த வண்டிக்காக காத்திருந்தனர், வண்டி கிளம்பி பாதி தூரம்செல்வதற்குள் வாகன நெரிசலில் சிக்கிகொண்டது. வெகுநேரம் சென்றும் வாகன நெரிசல் தீராததால் அருகில் இருந்த கடைக்கு சென்று தேநீர் அருந்த தொடங்கிநோம். வெகு நேரம் கழித்து சிறிது சிறிதாக வண்டி நகர்ந்தது.

ராம்பூரை கடந்து சோன்பிரயாக் வரை வண்டி ஊர்ந்து சென்றது சோன்பிரயாகை கடந்து சில நிமிடங்களில் இதற்க்கு மேல் போகாது இங்கயே இறங்கிகொள்ளுங்கள் என்று ஓட்டுனர் கூற இறங்கி நடக்கத்தொடங்கினேன். வழி எங்கும் வரிசையாக வாகனங்கள் பெரும்பாலான மக்கள் வாகனங்களை விட்டு இறங்கி சாலையில் நின்றுகொண்டிருந்தனர். ஒரு சோதனை சாவடி இருந்தது மேலிருந்து வரும் வண்டிகளை மட்டும் தான் விட்டு கொண்டிருந்தனர் நெரிசலை தவர்க்க குறிப்பிட்ட நேரம் இப்படி செய்வார்கள் என்று கூறினார்கள். ஆனால் நடந்து போக தடை இல்லை.

தனியாக கௌரிகுந்தை நோக்கி நடக்க தொடங்கினேன் அடர்ந்த மரங்கள் சாலையில் ஒரு புறம் சிறிய ஆறு ஓடிகொண்டிருந்தது, ஒரு சிறு பாலத்தை கடக்கும் பொழுது ஆற்று தண்ணீரின் ஓசை மட்டுமே கேட்டது பிறகு பறவைகளின் ஓசை என்று தனிமையில் ரசித்துக்கொண்டே நடக்கத்தொடங்கினேன், கண்ணுக்கெட்டும் தூரம் வரை முன்னும் பின்னும் ஆள்நடமாட்டம் இல்லை. ஏதாவது வனவிலங்கு வந்துவிட்டாள் என்ன செய்வது என்று உள்ளுக்குள்தோன சமாளித்துக்கொள்ளலாம் என்று மனம் சமாதானம் செய்தது மூன்று நான்கு கி.மீ க்கு மேல நடந்திருப்பேன் பிறகு ஒரு வண்டி வந்தது கைகாட்டி நிறுத்த சில நிமிடங்களிலேயே கௌரிகுந்த்தை அடைந்தோம். அடுத்து பதினான்கு கி.மீ நடைபயணம் செய்யவேண்டும் செய்தால் கேதர்ரை சந்திக்கலாம். கேதர் செல்வதற்கு விநாயகர் ஒரு வாயிலில் அமர்ந்து வரவேற்றார் நான் அவரை நோக்கி நடக்கத்தொடங்கினேன்.

தேடல் தொடரும்....


குறிப்பு : புகைப்படங்கள் அனைத்தும் மூன்றாவதுமுறை சென்றபொழுது எடுத்தது

பத்ரிநாத் - குப்தகாசி - கேதர்நாத் - பகுதி 3

*


சமோலி சென்று வண்டி மாறி செல்லுங்கள் என்று பலர் கூற ஏனோ அப்படி போக தோணவில்லை, ஒரு நாள் பத்ரியில் தங்கிவிட்டு போகலாம் என்று முடிவுக்கு வந்து விடுதிஅறை தேட ஆரம்பித்தேன், ஆனால் நினைத்தது போல் எங்கும் அறை காலி இல்லை என்ற வசனம்தான், நடப்பது நடக்கட்டும் என்று பனி படர்ந்த மலையை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டேன் அது பத்ரிநாத் கோவிலுக்கு பின்புறம் அமைந்திருந்தது, சிறுது தூரத்திற்கு பிறகு சிறு சிறு குகைகள் சிறிய கோவில்களை பார்க்க முடிந்தது. அதிக மனித நடமாட்டம் கிடையாது. ஒரு சிலர் எதிரே தென்பட்டனர் ஒருவரும் மலைக்கு சென்றிருக்க வாய்ப்பில்லை என்று எண்ணிக்கொண்டேன்.


மலைக்கு ஏறுவதற்கு இடப்பக்கம் பெரிய பனிப்பாறை போன்று ஒரு கி.மீ மேல் பறந்து விரிந்து கிடந்தது. முதல் முறை பார்த்ததால் வித்தியாசமாக இருந்தது அங்கேயே கரையில் நின்றுவிட்டேன். அருகில் இருவர் இருந்தனர் அந்த பனி பாறை தொடங்கும் இடத்தை பார்க்க எண்ணி மலைஇருக்கும் திசையை நோக்கி பார்க்க கன்னுகெட்டும் தூரம் வரை அது பறந்து விரிந்து கிடந்தது. பணிகட்டிமேல் இறங்கி நடக்கலாமா என்று யோசித்துகொண்டிருக்கையில் அருகில் இருந்த இருவரில் ஒருவர் முதலில் ஒரு குச்சியையும் பிறகு ஒரு காலையும் வைத்து தட்டி பார்த்து இறங்க தொடங்கினார். துணைக்கு ஒருவர் கிடைக்க நானும் கட கட என்று கீழே இறங்கினேன், என்னை தொடர்ந்து முதலில் இறங்கியவரின் நண்பரும் இறங்கினார். முழங்காலுக்கு மேல் இருக்கும் பனிகட்டியின் உயரம் அதன் அடியில் ஊற்று போல தண்ணீர் ஓடிகொண்டிருந்தது. கையில் கொண்டு சென்ற குச்சியை கொண்டு பணிகட்டியில் கிறுக்க தொடங்கினேன் தமிழ் என்று சரியாக தெளிவில்லாமல் கிறுகிருந்தேன்.




இறங்குவதற்கு முன்பணிகட்டிகளின் மீது எறிந்திருந்த சிறுகற்கள் ஆங்காங்கு சிறு துளையை ஏற்படுத்தி பாதி வெளியே தெரிவது போல் இருந்தது அதில் ஒரு கல்லை எடுத்து பெரியதாக தமிழ் என்று எழுதினேன், அதை பார்த்து அருகில் இருந்தவர் என்ன எழுதிருகிங்க என்று கேட்க, அவருக்கு பதில் சொல்லிக்கொண்டே சிறுகுழந்தை போல பணிகட்டியில் சறுக்கி விளையாட தொடங்கினேன் என்னை பார்த்த அவர்கள் இருவரும் சறுக்கி விளையாட தொடங்கினார்கள், ஒருவருக்கு முப்பதைந்திருக்கும் இன்னொருவருக்கு நாற்பது வயதிருக்கும்.

( அடுத்த முறை சென்றபொழுது அங்கு பனிபாறைகள் இல்லை ஒரு ஆறு ஓடிகொண்டிருந்தது முதல்முறை சென்றபொழுது அதன் மீதுதான் விளையாடிகொண்டிருந்தேன் என்று நினைக்க சிலிர்ப்பாக இருந்தது, கொஞ்சம் பனிப்பாறை கரைந்திருந்தாலும் முதல் முறையே சிவலோகத்தை பார்த்திருப்பேன்)

சிறிது நேர விளையாட்டுக்கு பின் மீண்டும் மேலே ஏற தொடங்கினேன் அதற்குள் அவர்கள் இருவரிடமும் நல்ல அறிமுகம் கிடைத்துவிட்டது ஒருவர் மட்டும் புதிதாக வந்திருப்பதாகவும் அடுத்தவர் ஒவ்வொரு வருடமும் வந்து ஒருமாதம் தங்கிருந்துவிட்டு செல்வதாகவும் கூறினார். நேரம் போனது தெரியாமல் அங்கேயே சில மணிநேரம் இருந்திருக்க கூடும் இறுதியாக திரும்பும் பொழுது அவர்கள் எங்க தங்கிருகிங்க என்று வினவ இன்னும் அறை கிடைக்கவில்லை போய்த்தான் தேடனும் என்று கூறினேன், அறை கிடைப்பது கடினம் என்று கூறினார் பத்ரிநாத்தை நன்கு தெரிந்த அவர். சிறிது நேரத்திலேயே உங்களுக்கு விருப்பம் இருந்தால் எங்களுடனே தங்கலாம் ஒரு மடத்துக்கு சொந்தமான இடத்தில் தான் தங்கிருக்கிறோம் என்றார்.

சில மணிநேர பழக்கம்தான் என்றாலும் பெரியதாக நான் யோசிக்கவில்லை உடனே ஒப்புக்கொண்டேன் மடம் என்பதால் எதுவும் பிரச்சனை இருக்காது என்று என் மனம் என்னிருக்கலாம். வாடகை எவ்வளவு என்று கேட்க ச்சே ச்சே அது எல்லாம் இல்லை என்றார்.




கீழே இறங்கி கோவிலுக்கு அருகில் ஒரு பாலத்தின் தொடக்கத்தில் சிறிது நேரம் அமர்ந்தோம் பல காவிவுடை சாமியார்கள் கடந்து சென்றுகொண்டிருந்தனர், அங்கு அமர்ந்துகொண்டே சுற்றிலும் இருந்த மலைகளை பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு ஒரு மடத்திருக்கு கூட்டிசென்றனர் அங்கு ஒரு சாமியார் அங்கு நின்றுகொண்டிருந்த மற்ற சாமியார்களுக்கு எதோ ஒரு சீட்டை கொடுத்துகொண்டிருந்தார், உணவு உண்பதற்காக இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன் என்னை அவர்கள் கூட்டிக்கொண்டு அந்த மடத்தின் தலைமை சாமியார் அறைக்கு சென்றனர், அந்த அறை முழுவதும் கடவுளின் படங்கள் அவர்கள் இருவரும் வயதான சாமியாரின் காலில் விழுந்து ஆசி வாங்கினார் பிறகு தரையில் அமர்ந்தனர், சாமியாரும் தரையில் அமர்ந்தார் நானும் அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டேன் அவர்கள் பேசிகொண்டிருகையிலே இன்னொரு சாமியார் அந்த அறைக்கு வந்து என்னருகில் அமர்ந்தார் நிறைய ருட்ராக்ஷ்மாலை அணிதிருந்தார். எப்படி நல்ல ருட்ராக்ஷத்தை கண்டறிவது என்று என்னருகில் வந்தமர்ந்த சாமியாரிடம் கேட்க நீரில் மூழ்கினால் நல்லது மிதந்தால் போலி என்று கூறினர். எங்கிருந்து ருத்ராக்ஷம் வருகிறது என்று கேட்க நேப்பாளிலிருந்து வருகிறது என்று கூறினார். எனக்கு ஒரு ருத்ராக்ஷம் வேணும் என்று கூற நாளை காலை வா கண்டிப்பாக வாங்கி வைக்கிறேன் என்று கூறினார். ஆனால் போதையூட்டும் தண்ணீர், அசைவம் கூடவே கூடாது என்றார் ஏற்கனவே அவைகளை தொடுவதில்லை என்று கூற புன்னகை அவரிடம் இருந்து வந்தது.அது கொஞ்சம் பெரிய மடமாக இருந்ததால் அங்கு தான் தங்கபோகிறோம் என்று என்னிருந்தேன் ஆனால் அங்கிருத்து வேறு ஒரு இடத்துக்கு கூட்டிசென்றனர்.


கொஞ்சம் உயரமான பகுதியில் அமைந்த ஒரு வீட்டுக் கூட்டிசென்றனர். அங்கு ஒரு வயதான துறவி இருந்தார், என்னை பற்றி கூட்டிசென்றவர் அவரிடம் சொல்ல, சிரித்துக்கொண்டே தாராளமாக தங்கிக்கோ ஒரு உருளைகிழங்கு கொஞ்சம் கோதுமை மாவுதான் கூட போடபோறேன் வேறு ஒன்னும் பெருசா நா செய்யபோறது இல்ல என்று புன்னகையுடன் கூறினார். அந்த வீட்டில் பாதி பூசை அறைதான் இருந்தது. சிறிது நேரத்திலேயே கடவுள் சிலைகள் மற்றும் பூசை அறையை சுத்தம் செய்து விளக்கேற்றி உடுக்கை அடித்து பூசையை தொடங்கினார் ஒரு மணிநேரத்துக்கு மேல் வழிபாடு தொடர்ந்தது அனைத்து இந்து கடவுள்களும் அங்கு இருந்தது. பூசை முடிந்ததும் திருநீறு கொடுத்தார். பிறகு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். கைலாயத்துக்கு செல்ல கடுவுசீடு, குடியுரிமை பற்றி தெரியாமல் உத்ராஞ்சல் எல்லை வரை சென்று திருப்பி அனுப்பப்பட்ட நிகழ்ச்சியை கூறினார்.



சிறிது நேரத்திலேயே என்னை கூட்டிவந்தவர் சமையலுக்கு வேண்டிய உதவிகள் செய்ய சப்பாத்தியும், உருளைக்கிழங்கு குருமாவும் செய்து கொடுத்தார். உணவு முடித்த பின் நன்கு இருடிருந்தது. அந்த வீட்டுக்கு ஒட்டியே இன்னொரு வீடு இருந்தது அந்த வீட்டில்தான் தங்க போகிறோம் என்றார், மூன்று நான்கு கட்டில்கள்இருந்தது கம்பளி போர்வைகள் ஏராளமாக இருந்தது. எங்கு விருப்பமோ அங்கு படுத்துக்குங்க என்று கூறினார் கூட்டிசென்றவர். ஒரு கட்டிலில் படுத்து மூன்று கம்பளிகள் போர்த்தியபிறகுதான் குளிர் அடங்கியது போல் இருந்தது எங்காவது விடுதியில் அறை கிடைத்திருந்தாலும் இத்தனை வசதி இருந்திருக்காது என்று மனம் கூறியது. நால்ல உறக்கம். லேசான குளிர் இருந்துகொண்டே இருந்தது உடம்பின் சூடு அதை தணிக்கும் பொருட்டு இருந்தது ஒரு புதுவிதமான உணர்வு உணரமுடிந்தது.

காலை வண்டிக்கு செல்லும் பொருட்டு விடியற்காலையிலேயே என்னை எழுப்பிவிட்டனர். வெளியில் வந்து வலது புறம் திரும்பி பனிபடர்ந்த மலையைகாண என்னையறியாமல் என் இருகரங்களும் தலைமேல் கூப்பி வணங்கியது. அனைவருக்கும் அந்த மலையை காணும் பொழுது அப்படிதான் தோனுமா என்று தெரியவில்லை ஆனால் எனக்கு பின்பு வந்த இருவரும் அவ்வாறே செய்தனர்.

காலையில் புறப்பட தயாராகியபிறகு அந்த வயதான பெண்துறவியின் வீடிற்கு சென்றோம் சிறிது நேரம் தரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம் அவர் எனக்கு முன்பு தரையில் அமர்ந்திருந்தார், கிளம்பும் முன் அமர்ந்தவாறே அவரின் காலுக்கு நேராக குனியவும், மாதாஜிகிட்ட ஆசி வாங்கிக்கோ என்று என்னை கூறிவந்தவர் சொல்லவும் சரியாக இருந்தது. என் வாழ்க்கையில் இரண்டாவது முறை காலில்விழுந்து ஆசி வாங்கியது அன்றுதான் (முதல் முறை என் அன்னையிடம் பதினைந்து வயதில் ஆசி வாங்கினேன்). என் முதிகில் கைவைத்து இரண்டு மூன்று முறை தட்டி எதோ கூறினார், நல்லருன்னுதான் சொல்லிருப்பார் என்று எண்ணிக்கொண்டேன். ( அங்கு அனைவரும் முதுகில் தட்டிதான் ஆசி வழங்குகிறார்கள்). துறவியிடம் ஆசி வாங்கினால் நல்லது என்று எல்லாம் எண்ணி காலில் விழவில்லை, ஊர் பேர் தெரியாத என்னக்கு ஒரு நாள் தங்க இடம் கொடுத்து ஒரு வேலை உணவு கொடுத்த அந்த மனது என்னை காலில் விழவைத்தது.

பிறகு நேராக கரம்குந்த்துக்கு சென்று நீராடிவிட்டு கோவிலுக்கு செல்லலாம் என்று என்ன நீண்ட வரிசை கண்ணுக்கு தென்பட அப்படியே கிளம்புவதாக அவர்களிடம் கூறிவிட்டு பேருந்துநிலையத்தை நோக்கி நடக்கத்தொடங்கினேன், அவர்கள் இருவரும் கோவிலுக்கு சென்றனர், எனக்கு பெரும்உதவி செய்தவருக்கு நன்றி என்று கூறினேன் அது பத்தாது என்று என் மனம் கூறினாலும் வேறு என்ன சொல்வது என்று அப்பொழுது தெரியவில்லை. எனக்கு அவர் உதவி செய்தது இறையின் செயல்தான் என்று என் மனம் எண்ணிக்கொண்டது, இந்த முறை கேதர்நாத் செல்லும்வண்டி நிரம்பிவிட்டதால் சீக்கிரம் எடுத்துவிட்டனர். வேறுவழியில்லாமல் எப்படியாவது இன்று செல்லவேண்டும் என்று வரைபடத்தை எடுத்து பார்க்க தொடங்கினேன்.


தேடல் தொடரும்...

குறிப்பு : புகைப்படங்கள் அனைத்தும் இரண்டாவதுமுறை சென்றபொழுது எடுத்தது

பத்ரிநாத் - குப்தகாசி - கேதர்நாத் - பகுதி 2

*
பகுதி 1 படிக்க இங்கு சொடுக்கவும்



ஜோஷிமத் வருவதற்குள் என் பக்கத்து இருக்கையில் பெரியவரும் அவரது மனைவியும் மாறி மாறி அமர்ந்து வந்தனர்(முழுக்குடும்பமும் வந்ததால் அவர்கள் பேச்சிதுனைகேர்ப்ப அவ்வபோது மாறி அமர்ந்துகொண்டனர்), இருவருமே வயதானவர்கள். அந்த பாட்டி அவர்கள் வீட்டில் செய்து கொண்டுவந்த தின்பண்டத்தை கொடுக்க பேருக்கு ஒன்று எடுத்துக்கொண்டேன். பேருந்து பயண வழியெங்கும் இருசக்கர வாகனங்களில் வரும் சர்தார்களை காணமுடிந்தது எனக்கு அருகில் அமர்ந்திருந்த பெரியவரை அது பற்றி கேட்க இந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் பத்ரிநாத்துக்குதான் செல்லும் என்று கூறினார், எனக்கு அவர் பதிலில் உடன்பாடு இல்லை. தெரியாமல் சொல்கிறார் என்று உறுதியாக நினைத்தேன்.

ஜோஷிமத்தில் வண்டி இறக்கிவிட்ட இடத்தில் நிற்பதை பார்த்த பக்கத்து இருக்கை பெரியவர் அவர்களுடன் வந்து தங்கிகொள்ளும்படி கூறினர்(அறை பக்கத்திலேயே இருந்தது), தயக்கம் இருந்தாலும் எனக்கு வேறு வழியில்லை ஆகவே அவருடன் சென்றேன், நான் சென்ற வண்டியில் இருந்தவர்களில் பெரும்பாலோனோர் அங்கு இருந்தனர், புதியதாக கடைக்காக கட்டப்பட்ட இடத்தை வாடகைக்கு விட்டதில் எங்கள் வண்டியில் வந்தவர்களுக்கு அந்த இடம் கிடைத்தது. கூடவே பெட்டும் வாடகைக்கு கிடைத்தது. நான் கதவின் அருகிலேயே படுத்துக்கொண்டேன், பின்பு என்னருகில் பெரியவரின் மகன் வந்து படுத்துக்கொண்டார். எங்களுடன் பயணித்த மிக வயதான தம்பதிகளும் (இவர்கள் வேறு, இருவர் மட்டும் வந்திருந்தனர்). படுப்பதற்கு முன் அந்த தாத்தா சூடத்தை பற்றவைத்து சுற்றிலும் காட்டிவிட்டு அனைவருக்கும் திருநீறு கொடுத்தார். தூங்க ஆரம்பித்து சிலநிமிடங்களிலேயே யாரோ எழுப்புவது போல இருந்தது.

எழுப்பியது பெரியவரின் மருமகன், விடியற்காலையிலேயே எழுப்பிவிட்டனர், எழமனமில்லாமல் எழுந்து கிளம்பதுடங்கினேன். வரிசையாக தயார் நிலையில் நின்றுகொண்டிருந்தன வண்டிகள், நான் வந்த பேருந்தை கண்டுபிடித்து ஏறிக்கொண்டேன். சாலை திறக்கப்பட்டதும் வண்டிகள் நகர தொடங்கின, சாலைகள் நன்றாக இருந்தது என்று கூற இயலாது. வண்டி விஷ்னுப்ரயாக், கோவிந்க்காட் வழியாக சென்றது, ஜோஷிமத்திலிருந்து கோவிந்க்காட்டுக்கு இருபத்தி இரண்டு கி.மீ, கோவிந்க்காட்டிலிருந்துதான் ஹெம்குந்து செல்லவேண்டும், சீக்கியர்களின் புனிதஇடமாக இது விளங்குகிறது ஆனால் 15 கி.மீட்டர் மலையில் நடந்து சென்றுதான் அந்த இடத்தை அடையமுடியும். (சீக்கியர்கள் இருசக்கர வாகனங்களில் கானபட்டதர்க்கான காரணம் இதுதான்). வழியிலே ஒருவர் கைகாட்ட வண்டியை நிறுத்த அவரை எற்றிக்கொண்டனர் வேட்டிமட்டும் அணிதிருந்தார் மேல் சட்டை இல்லை கையில் பெரிய குச்சி அதில் முள் முள்ளாக இருப்பது போல் இருந்தது, அவரிடம் நடத்துனர் பயனசீட்டுக்கு காசு கேக்க, தன்னிடம் காசு இல்லை என்றும் தான் பாபா என்று கூறினார் (வடஇந்தியாவில் அனைத்து சாமியார்களையும்,யோகிகளையும் பாபா என்று தான் அழைப்பர்), சிறிது நேரத்தில் ஏன் இந்தமாதரி கம்ப வச்சிருக்கிங்க முள் முள்ளா இருக்கு என்று நான் கேக்க காடுகளில் இருப்பதால் மிருகங்களில் இருந்து பாதுகாக்க இதை வைத்திருக்கிறேன் என்று கூறினார்.

வண்டி பண்டுகேஷ்வர்ரை கடந்து ஹனுமான் சட்டியை நெருங்கும்பொழுதே பனிபடர்ந்த மலைகளை காண முடிந்தது, வாழ்கையில் அருகிலிருந்து பணிபாறைகளை முதலில் நான் கண்டது இங்குதான். ஹனுமான் சட்டிலிருந்து பத்ரிநாத் 11 கி.மீ தொலைவில் இருக்கின்றது. ஜோஷிமத்திலிருந்து பத்ரிநாத் வரும் வழி மிக அழகாகவும் அபாயகரமானதாகவும் இருக்கின்றது. ரிஷிகேசிலிருந்து பத்ரிநாத்துக்கு முன்னூறு கி.மீட்டர் பயணத்தை முடித்து பத்ரிநாத்தை அடைந்ததும், வண்டியிலிருந்து "பத்ரிநாராயண மூர்த்திக்கு ஜெ", " பத்ரி விஷால்கி ஜெ" என்ற கோஷங்கள் எழும்பின, பாதுகாப்பாக வந்துசேர்ந்த ஒரு காரணம் போதும் அந்த கோஷங்கள் எழும்ப, பக்திகாரண கோஷங்கள் எல்லாம் பிற்பாடுதான்.

கோவிலுக்கு சென்றுவிட்டு பிறகு சிறிதுநேரம் ஊரை சுற்றிவிட்டு கேதர்நாத் செல்லவேண்டும் என்பதுதான் என் எண்ணமாக இருந்தது. வண்டியிலிருந்தவர்கள் அனைவரும் இறங்க பொறுமையாக இறங்கி அனைவரும் செல்ல இறுதியாக நான் அவர்களை பின்தொடர்ந்தேன். வழியில் காபியும், சிற்றுண்டியும் கொடுத்துகொண்டிருந்தனர் ( கோவில் சார்பாக என்று நினைக்கின்றேன்), நான் காப்பியை மட்டும் வாங்கிகுடித்துக்கொண்டே சென்றேன் அந்த குளிருக்கு சூடான காப்பி இதமாக இருந்தது. திரும்பி இடது பக்கம் பார்க்க முழுவதும் பனிபடர்ந்த மலை எதோ வெள்ளை பஞ்சை கொட்டிவைத்ததுபோல் இருந்தது கால்கள் நடக்க மறுத்துவிட்டன. சிலநிமிடங்கள் அங்கேயே நின்று பாருத்துகொண்டிருந்தேன். தனியாக சென்றால், யார் என்ன நினைப்பார்கள் என்று கவலைகொள்ளாமல் நாம் நாமாக நமக்கு பிடித்ததை ரசிக்க பிடித்த இடத்தில் அதிக நேரத்தை செலவளிக்கமுடியும்.



கோவில் எந்த திசையில் இருக்கின்றது என்று தெரியாததால் மக்கள் கூட்டம் சென்றுகொண்டிருந்த திசையை நோக்கி பின்தொடர்ந்தேன். சிலநிமிட பயணத்திலேயே கோவிலை நெருங்கிவிட்டேன். சிறு பாலத்தின் வழியாக ஆற்றை கடந்து (அழக்னண்டா) கோவிலருகே சென்றேன், அப்பொழுது பெரியவரின் மகன் என்னை அவருடன் கூட்டிசென்றார், என் பையை அவரிடம் கொடுத்துவிட்டு கோவிலுக்கு வெளியில் இருந்த கரம்குந்தில்(வெந்நீர்நிரப்பப்பட்ட தொட்டி) குளித்துவிட்டு கோவிலுக்குள் செல்ல வரிசையில் நிற்க எண்ணி வரிசையை தொடர்ந்து செல்ல அது ஒரு கி.மீ சென்றிருக்கும், இவ்வளவு கூட்டமாக இருக்கே எப்ப கோவிலுக்குள் போய் அப்பறம் எப்ப கேதார் போவது என்ற கவலை ஏற்பட்டது. ஈர ஷாட்ஷோடு வரிசையில் நின்றுகொண்டிருந்தேன் அனைவரும் கையில் அர்ச்சனை செய்ய பல பொருட்கள் சேர்ந்த ஒன்றை வைத்திருந்தனர் நானும் ஒன்று வாங்கிகொண்டேன் (திரும்பி போறப்ப அணியில் ப்ரஷாதம் கேப்பார்களே) மெல்ல நகர்ந்தது வரிசை ஓரிரு மணிநேரத்தில் கோவில் கதவை அடைந்தோம், கோவில் முன்பு கட்டப்பட்டிருந்த மணியிலிருந்து எழும்பும் ஓசையை கேட்பதே ஒரு வகை இன்பம்தான் வெளி வாயிலை தாண்டி கோவிலுக்குள் நான் நுழைந்ததும் கதவுசாத்தப்பட்டது அத்னால் எங்களுக்கு பல நிமிடங்கள் கடவுளைகாண வாய்ப்புகிடைத்தது.



கோவிலுக்குள் நுழையும் பொழுதுதான் ஆகா.. எடுத்தவுடனே எதிர் கம்பெனிக்கு (வைணவம்) வந்துட்டேனே என்று தோன்றியது. வழக்கமாக வைணவ கோவில்களில் பெரிய ஈர்ப்பு எனக்கு இருந்ததில்லை (மதுராவில் கிருஷ்ணன் ராதா சிலையை தவிர்த்து ) பத்ரியும் அப்படித்தான் இருந்தது முதல்முறை செல்லும்பொழுது. பல கி.மீ பயணம் செய்து வந்ததால் கோவிலை பார்க்க ஆனந்தமாக இருந்தது என்பது உண்மை. கதவறிகில் இருந்தததால் அனைவரும் செல்லும்வரை அங்கு நின்று கருவறையை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. எதோ கறுப்பாக சிறியதாய் இருந்தார் மூலவர். இந்த கோவிலில் பழங்காலத்திலிருந்து நம்பூதிரிகள் தான் பூசை செய்கின்றனர், ஆதிசங்கரர் கேரளத்திலிருந்து வந்தாதால் கூட இருக்கலாம் (ஆயிரம் வருடங்கள் முன்புதான் மலையாளம் தோன்றியது, ஆதிசங்கரர் அதற்க்கு முன்பு தோன்றியவர் என்று நினைக்கின்றேன்). மூலவர் சன்னதியாயை விட்டு வெளியே வர எதிரே மகாலக்ஷ்மி சன்னதி. இவங்கள டெம்ப்ளேட்டா வச்சிதான் மகாலக்ஷ்மி மாதரி பொண்ணு கிடைக்கனும்ன்னு தேடுராங்கலானு பக்கத்தில் சென்று பார்த்தேன். அதன் அறிகிலேயே பல சிறிய சட்டிகளில் பொங்கிய சாதத்தை, நம்பூதரி வந்து தண்ணீர் தெளித்து ப்ரசாதமாக்க பிறகு அதை முப்பது ருபாய்க்கு பிரசாதமாக விற்கின்றனர் (கண்டிப்பாக காசுவுள்ளவர்களுக்குதான் பிரசாதம்)
முப்பதுரூபாய் கொடுத்து ஒரு தட்டில் (காகித தட்டு) சாதத்தை வாங்கி மூலவர் சந்நிதி சுவற்றில் சாய்ந்தவாறு உன்ன ஆரம்பித்தேன். உண்மையில் அதை நான் பிரசாதமாக பார்க்கவில்லை மதிய உணவாகத்தான் பார்த்தேன். (அனைவருக்கும் கிடைக்கவில்லை என்றால் அதன் பெயர் ப்ரஷாதம் ?).

உணவு உண்டுகொண்டிருக்கும் பொழுதே, சமையலறையில் இருந்து வந்த ஒருவரிடம் ஒரு விவசாயிபோலிருந்தவர் தானியங்களை தானமாக கொடுக்க முற்பட்டார் ஆனால் கோவிலை சேர்ந்தவர்(சமையலரையி இருந்து வந்தவர்) ஒரு விரலால் அதை தரையில் வைக்கசொல்ல, கொண்டுவந்தவர் தானியங்களை தரையில் வைத்தார், அதன் மீது தண்ணீர் தெளித்து பிறகு எடுத்துக்கொண்டார். ஆனால் சிறிது நேரத்திலேயே விவசாயிபோல் இருந்தவர் தன் நண்பரை கூட்டிவந்தார், ஆனால் அவரது நண்பர் பணமாக கொடுக்க இப்பொழுது கொடுப்பவரின் கை மேலும் வாங்கும் கோவிலை சேர்ந்தவரின் கை கீழுமாக இருந்தது, (இப்பொழுது தண்ணீர் தெளிக்க வில்லை ? ) முதல் நிகழ்வில் கோபமும் இரண்டாவது நிகழ்வில் சிரிப்பும்தான் எனக்கு வந்தது.

கோவிலை விட்டு வெளியே வந்து மலையை/கோவிலை திரும்பி பார்த்துவிட்டு எனது பையை கொடுத்தவரிடம் இருந்து வாங்கிக்கொண்டு பேருந்துநிலையத்தை நோக்கி நடக்கத்தொடங்கினேன்... சுற்றிலும் மலைசூழ்ந்த பகுதி பத்ரிநாத் பனிபடர்ந்த மலை, குளிர், நதி அதன் அழகு. எங்குபார்த்தாலும் காவயுடை சாமியார் கூட்டம், சாமியார் போர்வையில் பிச்சைகாரர்களும் இருப்பார் என்றே எனக்கு தோன்றியது ( காசு கொடுத்தவரின் முகத்தை பார்க்காமல் போட்ட காசைபார்தால் அவர் பிச்சைகாரர் என்று என் எண்ணமாக இருந்தது) கோபீஸ்வர் வழியாக கேதர்நாத் செல்ல பேருந்து இருப்பதாக ஏற்கனவே வழிபோக்கர்கள் சொல்லிருந்ததால் வேகமாக பேருந்து நிலையத்திற்கு சென்றேன். அங்கு பணிபுரிபர்களை கேக்க பேருந்து காலை எட்டுமைக்கே புறப்பட்டுவிட்டதாக பதில் வந்தது. இனி எப்படி செல்வது என்று யோசிக்கதொடங்கினேன்.

தேடல் தொடரும்...

குறிப்பு : புகைப்படங்கள் அனைத்தும் இரண்டாவதுமுறை சென்றபொழுது எடுத்தது

பத்ரிநாத் - குப்தகாசி - கேதர்நாத் - பகுதி 1

*


பத்ரிநாத் செல்வது கடினம், பெரிய மலைகளை கடந்து செல்லவேண்டும், என்ற நண்பர்களின் வார்த்தைகள் என்னை கண்டிப்பாக அங்கு போகவேண்டும் என்று தூண்டியது. ஒருவாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு நானும் என் நண்பனும் செல்ல திட்டமிட்டோம். ஆனால் எனக்கு மட்டும் தான் விடுப்பு கிடைத்தது. முடிவு செய்யப்பட்ட பயணம் ஏன் தடைபடவேண்டும் என்று தனியாக கிளம்பினேன். அதற்க்கு சில நாட்களுக்கு முன்பே கேதர்நாத், பத்ரிநாத்,கங்கோதரி, யமுநோதரி போன்ற இடங்களின் வரைபடம் மற்றும் தொலைவுகளை இணையத்தில் தேடி எடுத்துக்கொண்டேன். எனது அணியில் பெரும்பாலோனோர் வடஇந்தியர்கள்தான் அனால் அவர்கள் யாரும் பத்ரி,கேதர் சென்றதில்லை, ஒரு நண்பர் அவரது நண்பரிடம் கேட்டு எப்படி போகவேண்டு என்று கூறினார்.


நண்பர் கூறியபடி ஒரு ஆட்டோவில் ஆனந்தவிஹார் பேருந்து நிலையத்திற்கு செல்ல அங்கு ரிஷிகேஷ் பேருந்து இருக்கவில்லை. தவறுதலாக வந்தது பிறகுதான் தெரிந்தது, தனியா வேற போகணும், எப்படி பட்ட ஊர் / மக்கள் என்று கூட தெரியாது நான் பேசும் இந்தியை வைத்து கண்டிப்பாக தென்இந்தியன் என்று தெரியும் சிலர் ஏமாற்றகூட பார்ப்பார்கள் இத்தனை எண்ணங்களுக்கு மத்தியில், இப்படியே வீட்டுக்கு திரும்பிடலாமா என்று யோசிக்க . ச்சி ச்சி வீட்டுல இருந்து கிளம்பி வந்தாச்சி இனிமேல் எதுக்கு திரும்பி போகணும், தெரியாத ஊர் புதிய அனுபவம் கிடைக்கும் என்று எதோ ஒரு நம்பிக்கையுடன் ஒரு டவுன் பேருந்தை பிடித்து காஷ்மிரிகேட் பேருந்து நிலையத்தை அடைந்தேன், பிறகு ரிஷிகேஷ் செல்லும் பேருந்தில் ஏற ஆறுமனிநேர பயணத்துக்குப்பின் அடுத்தநாள் காலை ரிஷிகேஷ் பேருந்துநிலையத்தில் இறங்கி ஒரு தேநீர் குடித்துக்கொண்டே பத்ரி, கேதர், கங்கோதரி, யமுநோதரி செல்வதற்காக இருக்கும் பேருந்துநிலையத்தை (திஹ்ரி பேருந்து நிலையம்) பற்றி விசாரித்து ஒரு ஆட்டோவில் ஏறி அந்த பேருந்து நிலையத்தை அடைந்தேன். காலை 5.30 மணியிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன, காலையிலேயே செல்வது சிறந்தது.


பேருந்துகள் சிறியதாக இருந்தன அதற்கான காரணம் அப்பொழுது தெரியவில்லை, இரண்டு பேருந்துகள் புறப்பட தயாராக இருந்தது ஒன்று கேதர்நாத்துக்கும் மற்றொன்று பத்ரிநாத்துக்கும் செல்லவிருந்து எதில் ஏறுவது என்று சிறு தயக்கம் வந்தது. பத்ரிநாத் செல்லும் பேருந்தில் இருக்கைகள் அதிகம் காலியாக இருந்ததால் அதில் ஏறிக்கொண்டேன். கடைசி வரிசையிலிருந்து மூன்றாவது வரிசையில் வலது சன்னலோரத்தில் அமர்ந்துகொண்டேன். சிறிது நேரத்திலேயே வண்டி நிரம்ப தொடங்கியது. ஜான்சியை சேர்ந்த ஒரு குடுபத்தினர் மகன் மகள்கள், மருமகன்கள், பேரகுழந்தைகள் உடன் வண்டியில் ஏறிக்கொண்டனர். குடும்ப தலைவர் எனது பக்கத்தில் வந்து அமர்ந்துக்கொண்டார், பலமாதங்கள் வெட்டப்படாத தலைமுடி, பலவாரங்கள் சவரம் செய்யாத முகம், டி.ஷர்ட் , சாட்ஸ் இது தான் என் அடையாளம். சிறுபையன் ஒருவன் கோவில் புராணங்களை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் விற்றுக்கொண்டிருந்தான் ஆங்கிலத்தில் ஒரு புத்தகத்தை வாங்கிக்கொண்டேன்.


வண்டி கிளம்பியவுடன் "பத்ரி விஷால்கி ஜெ" என்று கோஷங்கள் வண்டியிலிருந்து எழும்பின, வாங்கிய புத்தகத்தை படிக்க ஆரம்பித்து சிறிது நேரத்திற்கு பிறகு சன்னல்வழியாக வெளியே பார்க்க. சில மாதங்களுக்கு முன் நான் சென்ற லக்ஷ்மன் ஜுலா பாலத்தை உயரத்தில் இருந்து பார்க்க அற்புதமாக இருந்தது (ரிஷிகேஷில் இருந்து தான் இமயமலை ஆரம்பிக்கிறது), வண்டி மேலே செல்ல செல்ல கங்கை நதிக்கும் வண்டிக்குமான இடைவெளி கூடிக்கொண்டே இருந்தது. மிக உயரத்தில் இருந்து கங்கையை பார்த்துக்கொண்டே செல்வது புதிய அனுபவத்தை கொடுக்கும், வண்டி வழியில் நிறுத்த, இறங்கி சாலையின் ஓரத்தில் பலமாக கால்ஊன்றி கீழே ஓடும் நதியை பார்க்க ஒரே ஆனந்தம் ஒரு பக்கம் தவறி விழுந்தால் அவ்வளுவுதான் என்ற எண்ணமும் கூட. ஆனால் அதைவிட ஆழமான, அழகான இடங்களை பார்க்கபோகிறேன் என்று அப்பொழுது தெரியவில்லை. பயணம் வெற்றிபெற்றுவிட்டதாக மனது இங்கேயே அறிவித்துவிட்டது.





ரிஷிகேஷை அடுத்து கொஞ்சம் பெரிய ஊர் தேவ்ப்ரயாக், இங்கு தான் பாகிரதி மற்றும் அழக்னண்டா என்ற இரண்டு நதிகள் இணைந்து கங்கையாக மாறுகின்றது. கங்கையாக மாறி தரை பகுதியில் பாயும் முதல் இடம் ரிஷிகேஷ். வண்டியில் அமர்ந்துக்கொண்டே இவற்றை பார்த்துக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தேன் அப்பொழுது இவ்வளவு விபரம் தெரியாது, எனக்கு அருகில் இருந்த பெரியவர் தான்னை அறிமுகபடுதிக்கொண்டு என்னை பற்றி கேட்டு தெரிந்துக்கொண்டார், அவரது மகள் திருமணம் முடிந்து குடும்பத்துடன் பத்ரிநாத் சென்று கொண்டிருப்பதாக கூறினார். அவர்கள் கொண்டுவந்த தின்பண்டங்களை எனக்கு கொடுத்தார் அப்பொழுது வேண்டாம் என்று மறுத்துவிட்டேன்.
(பாகிரதி மற்றும் அழக்னண்டா என்ற இரண்டு நதிகள் இணைந்து கங்கையாக மாறுகின்றது)

அடுத்து வண்டி ஸ்ரீநகர் என்ற ஊரை கடந்தது, மலைமீது அமைந்திருக்கும் பெரிய ஊர் மற்றும் அழகான ஊர், தேவ்ப்ரயாகில் இருந்து முப்பத்திமூன்று கி.மீ ரில் அமைந்துள்ளது இந்த ஊர். தனியாக நான் ஊர்சுற்ற கிளம்பியதால் அலுவலக நண்பன் (வடஇந்திய) அவ்வபோது எங்கு இருக்கிறேன் என்று என் கைதொலைபேசியில் அழைத்து தெரிந்துகொண்டான். உண்மையில் நான் தொலைந்துவிடுவேனோ என்ற பயமாக கூட இருந்திருக்கலாம். ஸ்ரீநகரில் இருந்து முப்பத்திநான்கு கி.மீ ரில் ருத்ரபிரயாக் என்னும் ஊர் வந்தது இங்கிருந்துதான் பத்ரிநாத்துக்கும் கேதர்நாத்துக்கும் இரண்டாக சாலைகள் பிரிகின்றன. அடுத்து கரன்பிரயாக், நன்ட்ப்ரயாக் வழியாக சென்று சமோலியை அடைந்தோம். இந்த ஊர் சமோலி மாவட்டத்தை சேர்ந்திருந்தாலும் மாவட்டத்தின் தலைநகரம் கோபீஸ்வர், சமோலியை கடந்து வண்டி ஜோஷிமத் செல்வதற்குள் இருட்டிவிட்டது (மாலையே வெளிச்சம் மங்கிவிடுகிறது) அங்கு இரவு தங்கிவிட்டு காலையில்தான் செல்லமுடியும் என்று கூறிவிட்டனர், மலைபகுதி என்பதால் பகலில் மட்டுமே பயணம் செய்ய அனுமதிஉண்டு. மற்றநேரங்களில் பாதையை மூடிவிடுகின்றனர். ஆதலால் இரவு அறை எடுத்து தங்கிவிட்டு விடியற்காலை ஆறுமணிக்குள் வண்டி இருக்கும் இடத்துக்கு வந்துவிடுங்கள் என்று ஓட்டுனர் கூறினர், ரிஷிகேசிலிருந்து ஜோஷிமத் வருவதற்கு பத்து முதல் பன்னிரண்டு மணிநேரமாகும், முழுவதும் மலைமீது பயணம்.( வழியில் மண்சரிவு, விபத்து எந்தவண்டிக்கும் நேராதபட்சத்தில்)


ஜோஷிமத்தில் இறங்கியவுடன் வீசிய காற்று சில்லென்று வருட, தொடக்கத்தில் இதமான குளிர் உடலில் பரவ ஒரு வித இன்பம் தொற்றிக்கொண்டது, ஜோஷிமத்தில் ஆதிசங்கரர் தங்கிருந்தாக கூறினர் எதையோ நிறுவியதாக கூட கூறினர், அவருக்கு ஒரு கோவில்கூட இருப்பதாக கூறினர். ஆனால் எனக்கு அந்த நேரத்தில் ஒரு அறை மட்டுமே தேவை என்பதில் கவனம் இருந்தது குளிர் அதிகமாக ஆரம்பித்ததால், பல நல்ல விடுதிகளை கொண்ட ஊர் வருடத்தில் இரண்டு மூன்று மாதங்கள் மட்டுமே நல்ல வருமானம் இருக்கும் என்று தோன்றுகிறது ( வருடத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே பத்ரி, கேதர் போன்ற கோவில்கள் திறந்திருக்கும் மற்ற மாதங்களில் கடும் பனிபொழிவு காரணமாக திறக்கப்படமாட்டாது) நான் சென்ற நேரம் அப்படி, ஒரு விடுதியில் கூட அறை கிடைக்கவில்லை, அதுமட்டும் இல்லாமல் தனியாக சென்றதால் அறை கிடைப்பது கடினமாக இருந்தது, குளிர் வேறு அதிகமாகிக்கொண்டே இருந்தது ஒரு மணி நேரம் அலைந்து எங்கும் தங்க அறை கிடைக்காததால் வண்டி இறக்கிவிட்ட இடத்திற்கே திரும்பி வந்தேன். கோவில் திறந்த முதல் இரண்டு மாதங்கள் பயணம் செய்ய சிறந்த நாட்கள் அடுத்து மழைக்காலம் வருவதால் யாரும் செல்ல விருப்பபடமாட்டார்கள் (மண்சரிவுகள் இருக்கும்) ஆகவே முதல் இரண்டு மாதங்கள் அதிக மக்கள் வருவதால் அறை வாடகை யானைவிலை இருக்கும் அதற்க்கு தயாராக இருந்தாலும் அறை கிடைப்பதில் சிரமம் இருக்கும். இன்னைக்கு சிவராத்திரிதான் குளிரிலேயே கிடக்கவேண்டியதுதான் என்று என்மனதை தயார் படுத்திக்கொண்டேன்.

தேடல் தொடரும்...

குறிப்பு : முதல் புகைப்படத்தை தவிர மற்ற அனைத்தும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது

கோடா திங்கி - ஜோகூர், மலேசியா

*

முதல்நாள் மாலை நண்பர் அழைத்து கோடா திங்கி போலாமா என்று கேட்க உடனே ஒத்துக்கொண்டேன். ஊர் சுற்ற வேண்டான்னா சொல்ல போறோம். அடுத்தநாள் காலை பத்துமணிக்கு மேல் ஜோகூர் இமிக்றேசனை அடைந்தோம். என்னுடைய கடுவுசீட்டு மற்றும் விசாவை அலுவலர் பார்த்து உங்கள் பெயர் என்று கேக்க, பக்கத்திலிருந்த அதிகாரி சிரித்துக்கொண்டே சாருக்கானா ? (உண்மையாக தான் ) என்று கேட்க ( மலாய்காரர்கள் இந்தி சினிமாவை பார்பார்கள்), சிரித்துக்கொண்டே என்னுடைய பெயரை கூற, ஆவணத்தை சரிபார்த்துவிட்டு அனுமதித்தார்.

ஜே.பி டவுனில் வழக்கமாக செல்லும் உணவகத்திற்கு சென்று, காலை உணவை முடித்துக்கொண்டோம். (நிர்வாகம் மாறியிருந்தது உணவின் தரமும் சரியில்லை), அங்கு பசும்பால் காப்பி கிடைக்கததால் அருகிலிருந்து மற்றொரு உணவகத்திற்கு சென்று காப்பி குடித்துவிட்டு, முக்கிய சாலைக்கு வந்து டேக்சிக்காக காத்திருக்க ஒரு மலாய்காரர் வண்டி வந்தது, 40 ரிங்கிட்டுக்கு அருவி வரை வர சமதிக்க உடனே நாங்கள் மூவரும் ஏறிக்கொண்டோம், ஜோகூர் பக்ருவிலிருந்து கோடா திங்கி டவுன் வரை 42 கி.மீ அங்கிருந்து அருவிக்கு 14 கி.மீ செல்லவேண்டும்.

மலேசிய தேசிய நெடுங்சாலைகளில் பயணிப்பதே தனி சுகம்தான், அகலமான சாலை, சாலைகளின் இருபுறமும் பசுமையான மரங்கள், அதை ரசித்துக்கொண்டே சென்றோம் கோடா திங்கி நகரத்துக்கு சில கி.மீ முன்பு சாலை விபத்தின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட பயணம் தாமதமானது, நாப்பத்தி ஐந்து நிமிடங்களில் செலவேண்டிய இடத்துக்கு ஒன்னரை மணிநேரம் பயணம் செய்யவேண்டி இருந்தது, அருவின் முகப்பை அடைந்த பொழுது ஒரு மணிக்கு மேல் இருக்கும். நெரிசலின் காரணமாக நேரம் அதிகமானதை காரணமாக கொண்டு அதிக பணம் கேட்க அவர் கூச்சப்பட நாங்களே 50 ரிங்கிட் கொடுத்தோம், திரும்பி வரும் நேரத்தை நாங்கள் சொல்ல அவர் காத்திருப்பதாக கூறினார்.



நபர் ஒன்றுக்கு பத்து ரிங்கிட் நுழைவுகட்டணம் வசுளிக்கப்பட்டது, அதிகம் என்று தோன்றியது, ரிசாட்டுக்கு சென்று ஒரு லாக்கரை எடுத்து முக்கியமானவற்றை வைத்துவிட்டு அருவியை நோக்கி நடக்க தொடங்கினோம், அருவியை பார்த்ததும் சிறிது ஏமாற்றம், மிக சிறிய அருவி, நீரில் காலைவைக்க முதலில் முடியவில்லை பிரீசரில் இருந்து எடுத்த தண்ணியை போல, ஜில்லென்று இருந்தது, நீருக்கடியில் அதிக கற்கள் இருந்ததால் பொறுமையாக நீரில் நடந்து சென்று தண்ணீர் கொட்டும் இடத்தை அடைந்தோம். நீரின் வேகம் சிறிது நேரத்திலேயே கூடிவிட்டது. அருவியில் குளித்துவிட்டு அறிகிலிருந்த பாறையில் அமர அருவி சாரல் பட இதமாக இருந்தது. அருவி நீர் ஓடும் பாதையில் நீச்சல் குளம் போல ஒரு பகுதி இருந்தது மூன்றடி ஆழம்தான் இருக்கும்.




அங்கு சென்று ஒரு டுயுபை வாடகைக்கு எடுத்துக்கொண்டு நெடு நேரம் நீரில் மிதந்துகொண்டிருந்தேன், ரைடு போவதற்கு வடிவமைக்கபட்டிருந்தது பாதையில் இரண்டு மூன்று ரைடு சென்று விட்டு மீண்டும் நீரில் குளித்துகொண்டிருக்கையில் இரண்டு தமிழ் குடும்பத்தை பார்க்க முடிந்தது, ஜில்லென்று இருந்ததால் நீரில் காலை வைக்க பயந்து கொண்டிருந்த மலசிய தமிழ் இளைஞரை அவரது மற்ற தமிழ் நண்பர்கள் ஒட்டிகொண்டிருந்தனர் என்னை பார்த்து அவர் புன்னகைக்க பதிலுக்கு நானும் புன்னகைத்தேன். நேரம் நான்கை தொட்டிருந்ததால் கிளம்ப ஆயத்தமானோம். உடையை மாற்றிவிட்டு லாக்கரிலிருந்து பொருட்களை எடுத்துக்கொண்டு, முகப்புக்கு சென்றால் அங்கு டேக்சி இல்லை பதினைத்து நிமிடம் காத்திருந்தும் வரவில்லை, நுழைவுசீட்டு கொடுத்தவரிடம் கேட்க நாங்கள் வந்த டேக்சி சென்றுவிட்டதாகவும் வேறு டேக்சி வேண்டும் என்றால் அழைக்கவேண்டும் என்றும் கூறினார் (கோடா திங்கி வரை செல்ல 25, ஜே.பி வரை செல்ல 65 ரிங்கிட் )

கோடா திங்கி சென்று மதிய உணவை முடித்துவிட்டு செல்லலாம் என்று முடிவுசெய்திருந்ததால் கோடா திங்கி வரை செல்ல ஒரு டேக்சி கேட்டோம், அவர் அவரது அலைபேசியிலிருந்து அழைத்துக்கொண்டிருக்கும் பொழுதே வெளியே ஒரு கார் வந்து நின்றது, கேட் திறந்தவுடன் எங்களை பார்த்து டவுனுக்கு போகனுமா என்று கேக்க நாங்கள் ஆம் என்றோம், தன்னுடனே வரலாம் என்று கூறினார் (வாடகை வண்டி அல்ல) பணம் வாங்கவும் மறுத்துவிட்டார், சீட்டு கொடுபவரிடம் டேக்சி வேண்டாம் என்று கூறிவிட்டு வந்தவர் வண்டியிலேயே சென்றோம், வண்டியில் தமிழ் திரைப்பட பாடல்கள் ஓடிக்கொண்டிருந்தது, எங்களுக்கு லிப்ட் கொடுத்தவர் மலேசிய தமிழர், தான் ஜே.பியை சேர்ந்தவர் என்று கூறினார், பேருந்து நிலையம் எங்கிருக்கிறது என்று சரியாக தெரியாததால் ஒரு குறிபிட்ட இடத்தில் இறங்கிகொண்டோம், மதியஉணவை பீசா ஹட் இருந்தால் அங்கே முடித்துக்கொல்லாம் என்று நண்பர் சொல்ல சிறிது தூரத்திலேயே ஒரு பீசா ஹட் இருந்தது, அங்கு மதிய உணவை முடித்துவிட்டு டேக்சிக்காக பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க தொடங்கினோம்.

ஜே.பி இமிக்றேசன்வரை செல்ல 40 ரிங்கிட் என்று பேசி ஒரு டேக்சியை பிடித்தோம், ஓட்டுனர் தமிழர், வண்டி எடுத்தவுடனே தமிழ் எப்.எம்க்கு மாற்றிவிட்டார். இனிமையான பாடல்களை கேட்டுக்கொண்டே ஜே.பி டவுனை 45 நிமிடங்களில் அடைந்துவிட்டோம், பசும்பால் காப்பி குடித்துவிட்டு செல்லலாம் என்று தோன்றியது ஆனால் நேரமின்மையை கருத்தில் கொண்டு வீட்டுக்கு திரும்பநேரிட்டது.

குறிப்பு : லர்கினிலிருந்து(ஜே.பி) கோடா திங்கி வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன (ஜே.பி டவுன், இமிகிரேசன் முடித்து அதன் வாசலிலேயே ஏறிக்கொள்ளலாம்), கட்டணம் 5 ரிங்கிட்டுக்கு குறைவுதான், ஆனால் கோடா திங்கி நகரிலிருந்து அருவிக்கு செல்ல டேக்சி எடுக்கவேண்டும் (கட்டணம் 15 முதல் 25 ரிங்கிட் பேசுவதை பொருத்து). சிங்கை மற்றும் ஜோகுரிலிருபவர்கள் ஒருநாள் சென்றுவர சிறந்த இடம்.

சிவகங்கா - கர்நாடகா

*

மாலையே, நாம சிவகங்கா போகலாம் ஐயப்பன் கோவில்கிட்ட இரவு நில்லுடா அலுவலகத்துல இருந்து நேரா வந்து கூட்டிகிட்டு போறேன்னு நண்பன் ராம் சொல்ல, இரவு பதினோரு மணிக்கு மேல ஐயப்பன் கோவிலுக்கு பக்கத்துல காத்துகிட்டு இருந்தேன். நண்பன் சொன்ன நேரத்துல இருந்து ரெண்டு மணிநேரம் கழித்து கோரமங்களா வழியா ஒரு வழியா ஸ்பெண்டர்ல வந்து சேந்தான். குளிர் காலம் இல்லாததுனால ஜெர்கின் கூட போடல. அவனும் அதேபோல.

எங்க ரெண்டு பேருக்குமே எப்படி போறதுன்னு வழி தெரியாது நண்பன் விசாரிச்சிட்டு வரன்னு சொல்லிட்டு அவனும் விசாரிக்காம வந்துட்டான். எப்படியாச்சும் போய்டலாம் அப்படின்னு முடிவு பண்ணி எஸ்வந்த்பூர் நோக்கி பயணித்தோம். பயணம் ஆரம்பிக்கும் பொழுது சிவகங்கால என்ன இருக்குன்னு கூட தெரியாது அது ஒரு மலை, ட்ரெக்கிங் போற இடம் அப்படின்னுத்தான் நினச்சேன். எஸ்வந்த்பூர தாண்டினவுடனே ஒரு பெட்ரோல் நிலையத்துல பெட்ரோல் போட்டுகிட்டோம், ரெண்டு பேரு இருக்கும் பொழுதே சொன்னத விட ஒரு லிட்டர் கம்மியா பெட்ரோல் போட்டுட்டு ஒரு லிட்டர்க்கு கூட காசு வாங்கிட்டான் பெட்ரோல் போட்டவன். எவ்வளவு பேசியும் அவன் ஒத்துக்கவே இல்ல. வேற வழி ஒரு லிட்டருக்கு கூட காசு போனது தான் மிச்சம்.

பெங்களூர் நகரத்த தாண்டினவுடனே குளிர் அதிகமா இருக்குரமாதறி இருந்தது அய்யயோ இது என்னடா வம்பா போச்சின்னு கர்சிப்ப எடுத்து காதோட சேத்துகட்டிகிட்டு பயணித்தோம். வழில ஒரு சின்ன பெட்டிகடை இருந்தது அங்க தேநீர் வாங்கிகுடிச்சிட்டு வழி கேட்டோம். அவரு கன்னடத்துல சொல்ல ஒரு வழியா புரிஞ்சிகிட்டு தொடர்ந்து பயணித்தோம் சாலை நன்றாக போடப்பட்டிருந்தது தேசிய நெடுஞ்சாலை என்று நினைக்குறேன்.

கொஞ்சம் தூரம் போறதுக்குள்ள இன்னும் குளிர் அதிகமா தெரிய ஆரம்பிச்சது, குளிர தாங்கமுடியாதால வண்டிய நிப்பாட்ட சொல்லி தங்கராசாவ துணைக்கு கூப்பிடடுகிட்டேன். எப்படித்தான் இந்த தம்ம அடிகுறிங்கன்னு படிக்குறப்ப இரண்டு வகுப்புக்கு ஒரு முறை என்ன தம்மடிக்க கூட்டிட்டு போன அதே நண்பர் கேட்டாரு. நேரம்டா இப்ப நீ இதுவும் கேப்ப இன்னமும் கேப்பன்னு சொல்லிட்டு மீண்டும் பயணத்தை தொடர்ந்தோம்... அண்ணே எப்படி வண்டி ஓட்டறேன் பாருன்னு அடிக்கடி கேட்டுக்குவான், சாலை நன்றாக இருந்தது ரொம்ப நேரம் கழித்து ஒரு நகரத்துக்குள்ள நுழைஞ்சோம் டும்கூர்ன்னு போட்டிருந்தது, தப்பா வந்தது மட்டும் நன்றாக புரிந்தது.

ஒரு லாரி ஓட்டுனரிடம் வழி கேட்க நீங்க முன்னாடியே இடது பக்கம் திரும்பிருக்கணும் என்று சொல்ல பல கி.மீ தேவையில்லாமல் பயணித்தது புரிந்தது திரும்ப வந்த வழியே சில கிலோமீட்டர் பயணித்தபிறகு சரியான வழியை கண்டுபிடித்து அந்த குறுகிய சாலையில் பயணித்தோம். சாலை ரொம்ப மோசமாகத்தான் இருந்தது ஒரு வழியா சிவகங்காவ அடைந்தபிறகு அறை எடுக்கலாம்ன்னு இருந்த எண்ணம் தகர்ந்தது, அது ஒரு சிறிய கிராமம் மலைக்கு மேல உள்ள கோவில் வேற திறக்க நேரமாகும் என்று சொன்னதால் மலை அடிவாரத்தில் நுழைவாயிலில் இருந்த திண்ணையில் படுத்துவிட்டோம் எப்படா விடியும் என்று கண்களை மூடிக்கொண்டு காத்திருந்தோம் ரெண்டு மணி நேரத்துலையே அந்த ஊரை அடைந்ததால. காலையிலேயே வந்திருக்கலாம் என்று தோன்றியது.

பெங்களூர்ல இருந்து எழுபது கி.மீ தான் ஆனா நாங்க நூறு கி.மீ மேல பயணித்து வந்திருப்போம்ன்னு நினைக்குறேன். அந்த குளுருல ரெண்டு மூணு மணிநேரம் கடத்துறதே பெருசா போச்சி. விடிந்ததும் கோவில் குளத்துல குளிச்சிட்டுதான் மலைமேல எறனும்ன்னு நண்பர் சொல்ல அந்த குளத்துல குளிச்சா மருத்துவமனைல கண்டிப்பா சேரனும் அந்த அளவுக்கு இருந்தது. கோவிலுக்கு போறப்ப கோவில் குளத்துலத்தான் குளிச்சிட்டு போகணும்ன்னு அவன் சொல்ல நா கோவிலுக்கு எல்லாம் வரல நீயே குளின்னு சொல்லிக்கிட்டு இருக்கும்போதே ரெண்டுபேர் அந்த குளத்துல குளிக்கபோனாங்க. இத பாத்த நண்பர் விடுவாரா வேற வழியில்லாம அந்த குளத்துல குளிச்சிட்டு பக்கத்துல இருந்த உணவகத்துக்கு சென்றோம்.

நாலு பெஞ்ச் போட்டுருந்தாக உணவகம்ன்னு சொல்லுரதவிட வீட்டு உணவகம்ன்னு தான் சொல்லணும் இட்லி மாதரி இருந்த ஒரு புது வகையான உணவ சாபிட்டோம் (கன்னட உணவு போல ) ரொம்ப நல்லாருந்தது, சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்கும்போது ஒரே அதிர்ச்சி, ரெண்டுபேருக்கும் சேத்தே பதினைந்து ரூபாய்க்குல்லத்தான் வாங்கினாக தப்ப கணக்கு போட்டுடாங்க போலன்னு நினச்சி சாப்பிட்டதெல்லாம் சொல்லி திரும்ப கேட்க அதே பணம்தான் வாங்கினாக.

மலைல ஏற ஆரம்பித்து கொஞ்சநேரதுலையே ஒரு குகை கோவில் வந்தது குகைக்குள்ள ஒரு லிங்கம் இருந்தது பெரிய குகை ஏற்கனவே ஐம்பதுக்கு மேல மக்கள் நின்னுகிட்டு இருந்தாக அபிசேகம் நடக்க ஆரம்பிச்சிது, நண்பர் பாத்துட்டுதான் போகணும்ன்னு சொல்லிட்டார் லிங்கத்துக்கு ஒவ்வொரு அபிசேகமா நடந்துகிட்டு இருந்தது இறுதியா வெண்ணைய லிங்கத்துமேல தடவி, திரும்ப அத எல்லாம் வழிச்சி எடுத்து ஒரு பாத்திரத்துல போட்டுடாக, எல்லாம் ஒரு வழியா முடிஞ்சி பூசைய ஆரம்பிச்சாக பூசை எல்லாம் முடிந்தபிறகு வெளியிலவரப்ப ஒரு இடத்துல ஒரே கூட்டம் என்னன்னு பாத்தா அந்த வெண்ணைய எல்லாம் ரொம்ப சின்ன டப்பால அடைச்சி இருபத்து ரூபாய்ன்னு வித்தாங்க அத வாங்கினதுல என் நண்பரும் ஒருத்தர், டேய் இத போய் காசு கொடுத்து வாங்கிகிட்டு வறியே, காலையில எவ்வளவு சாபிட்டோம் அதுக்கே இதவிட கம்மியாத்தான் அந்த பாட்டி வாங்கினாக, இத போய் காசுகொடுத்து வாங்கிட்டேயேன்னு தலைல அடிச்சிக்க சாமி பிரசாதம் தப்ப பேச கூடாதுன்னு சொன்னான், காசு இருக்குறவனுக்குதான் பிரசாதமே கிடைக்குது, இதுல சாமியாம் பூமியாம்ன்னு சொல்லிகிட்டே நடக்க ஆரம்பிச்சேன்.






வெய்யில் கொஞ்சம் அதிகமாச்சி பாதை வேற சொல்லிகிராப்புல இல்ல, டிரக்கிங் போக சரியான இடம், பாதை கரடு முரடாத்தான் இருந்தது, சில இடங்கள்ல ரொம்ப செங்குத்தா இருக்கும் வயசானவங்க ஏறது ரொம்ப கஷ்டம், செங்குத்தான இடங்கள்ல கம்பில இருந்து கைய்யவிடா அவளவுதான். சிவலோகத்த உடனே பாத்திடலாம், நிறைய புதுமண தம்பதிகள் வந்திருந்தாக பெரும்பாலும் பெங்களுர்ல இருந்து தான்.

ரொம்ப நேரம் கழித்து ஒரு வழியா மேல ஏறிப்போய் பாத்தா ஒரு சின்ன கோவில் இருக்கு அட இதுக்காகவா இவ்வளவு தூரம் வந்தம்ன்னு தோணிச்சி, குரங்குகளுக்கு வாழைப்பழம் வாங்கி கொடுத்துட்டு ஒரு பாறையோரம் நின்னுகிட்டோம் கொஞ்சம் வெய்யில் மற்றும் இனிமையான குளிர்ந்த காற்று வீசியது. அந்த காத்துக்காகவே திரும்ப போகலாம், இங்க இருந்துகுதிச்சித்தான் விஷ்ணுவரதனோட மனைவி தற்கொலை பண்ணிகிட்டாங்கன்னு ஒரு தமிழ் பய்யன் சொன்னான், கேட்க ஆச்சரியமா இருந்தது. பய்யன் அப்பறம் தான் சொன்னான் அந்த விஷ்ணுவரதன் ரொம்ப வருடத்துக்கு முன்னாடி வாழ்ந்த மன்னன்னு.

அங்கிருந்து கீழ பாக்க எல்லாம் பொம்ம மாதரி தெரிஞ்சது. தெளிவான சாலைகள், ஒரு புறம் ஏரி, வயல்வெளிகள் பார்க்க அற்புதம், தனிமைல நின்னு அத பார்த்தா எதோ நாம தான் இந்த தேசத்து ராசான்னு தோணும். நா கொஞ்சநேரம் தனிமைல போய் உட்காந்துகிட்டேன். அப்பறம் பொறுமையா கீழ இறங்கி வந்து அதே கடைல சாப்பிட்டுவிட்டு இரவு வீடு போய் சேர்ந்தோம். இது நடந்து பல வருடங்கள் ஆனாலும் இன்னும் அந்த இதமான தென்றலை நினைக்கும் பொழுது உடம்பு சிலிர்கிறது.
.
குறிப்பு : புகைப்படம் அனைத்தும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது, மேலும் விபரங்களுக்கு இங்கு சொடுக்கவும்.

வைஷ்ணவாதேவி கோவில் - கட்ரா - ஜம்மு




எனது வடஇந்திய நண்பன் குப்தாவுடன் ஏற்கனவே ஒரு பயணம் சென்றிருந்த நிலையில். அடுத்த பயணம் வைஷ்ணவாதேவி கோவிலுக்கு செல்லலாம் என்று கூப்பிட, கோவில் என்பதை விட ஜம்முவை கடந்து அறுபது கி.மீ செல்லபோகிறோம் என்று கூறியதால் உடனே சம்மதம் தெரிவித்தேன். தொடர்வண்டியில் ஜம்முவரை முன்பதிவு செய்ய முயற்ச்சித்தோம் ஆனால் ஒரு இருக்கை கூட எங்கள் பயண தேதியில் கிடைக்காததால் பேருந்திலேயே செல்லலாம் என்று முடிவு செய்தோம். பேருந்து என்று முடிவான பிறகு எனக்கு ஒரே சந்தோசம் பஞ்சாப் வழியாக ஒரு பயணம் மேற்க்கொள்ளவேண்டும் என்ற எனது நெடுநாள் விருப்பம் நிறைவேறப்போவதை நினைத்து.

பயண தேதி அன்று ஒரு ஆட்டோவில் காஷ்மீரி கேட்டை நோக்கி புறப்பட்டோம், அந்த ஆட்டோ ஓட்டுனர் பந்தயத்தில் செல்வதை போல அந்த பெரிய சாலையில் குறுக்கும் நெடுக்குமாக பலவன்டிகளை முந்திக்கொண்டு பலபேரின் சாபத்தை வாங்கிகட்டிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தார் ஒரு சிக்னலில் ஆட்டோ நிற்க, தொம் தொம் என்று அடி விழும் சத்தம் கேட்டது, அடி எங்கள் ஆட்டோ ஒட்டுனருக்குதான் பைக்கில் வந்த ஒருவர் அவரை அடிக்க ஆட்டோ ஓட்டுனர் திரும்பி அடிக்காமல் மனிப்பு கேட்டுக்கொண்டிருந்தார் உடனே என் நண்பன் "ராம் சே சலோ" என்று கூறிக்கொண்டிருந்தான். ஆறாம் சே என்றாலும் ராம்சே என்றாலும் ஒன்று தான் என்று தெரிந்துக்கொண்டேன். (இதே போன்ற ஒரு நிகழ்ச்சி மதுரா பேருந்து நிலையத்தின் வெளியில் சில மாதம் கழித்து கண்டேன் ஆனால் அதில் அடிவாங்கியது ஒரு அரசு பேருந்து ஓட்டுனர், அடி கொடுத்தது ஒரு பைக் ஓட்டுனர் ). பிறகு அந்த ஆட்டோ ஓட்டுனர் மெதுவாக எங்களை காஷ்மீரி கேட்டில் விட்டு சென்றார்.

குளிர்சாதம் செய்யப்பட்ட தனியார் வண்டிகளை தேடி ஒரு வண்டியிலும் இடம் கிடைக்காததால், வேறு வழியில்லாமல் அரசு பேருந்தை நோக்கி கிளம்பினோம் ஆனால் அங்கும் சொகுசு பேருந்து கிடைக்கவில்லை. நம்ம ஊர் டவுன் பேருந்தை போல ஒரு வண்டி ஜம்முவுக்கு செல்ல தயாராகி கொண்டிருந்தது அதை விட்டால் அப்பொழுது வேறு வண்டி இல்லை என்பதால் அதில் ஏறிக்கொண்டோம். வண்டி அம்பாலா, லூதியானா, ஜலந்தர் வழியாக ஜம்முவுவை நோக்கி சென்று கொண்டிருந்தது பஞ்சாப்பின் ஒரு சிறு சாலையோர கடையில் தேநீருக்காக நிறுத்தப்பட்டது. தேநீர் குடித்தப்பின் ஏண்டா குடித்தோம் என்று இருந்தது. பஞ்சாப் ஜம்மு எல்லையிலேயே வாகன சோதனை நடைபெற்றது, அனைத்து வண்டிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பின்பு விடியற்காலை ஜம்முவை அடைந்தோம், அங்கு சிறிது நேரத்துலையே கட்ராவுக்கு வண்டி கிடைக்க தொடர்ந்து பயணித்தோம்.

வண்டியிலிருந்தே ஜம்முவை பார்த்துக்கொண்டே சென்றேன், நகரின் பெரும்பாலான பகுதிகளில் ராணுவம் இருப்பதற்க்கான அடையாளங்கள் தெரிந்தது. கோபுரத்தின் மீது துப்பாக்கியுடன் காவல் காப்பது போன்றவற்றை இங்கு தான் முதன் முதலில் பார்த்தேன். ஜம்முவை கடந்தவுடன் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி நடத்துனர் இரண்டு சீப்பு வாழைப்பழங்களை வாங்கினார், ஜம்மு நகரை கடந்தவுடன் மலை பகுதி ஆரம்பமாகியது. நிறைய வளைவுகளை கடந்து செல்லவேண்டிருந்தது, சாலையின் இடது பக்கத்தில் குரங்கு கூட்டங்களை தென்பட்டது, சென்று கொண்டிருந்த வண்டியிலிருந்து வாழைப்பழங்கள் வீசப்பட்டுக்கொண்டிருந்தது வேறு யாரும் அல்ல நம்ம நடத்துனர்தான் அந்த வேலையை செய்துகொண்டிருந்தார் நாட்டில் மழை பொழிய நம்ம நடத்துனரும் ஒருகாரணம் என்று எண்ணிக்கொண்டேன், பல மலைகளை கடந்து வண்டி கட்ராவை அடைந்தது.

மலைகளின் நடுவில் அந்த ஊர் அமைந்திருந்தது போல் இருந்தது. மழை பொழிந்து இருந்ததால் அந்த ஊரின் அழகை அது மேலும் கூட்டிருந்தது, வண்டியை விட்டு இறங்கியவுடன். எங்களிடம் அறை எடுத்துக்கொள்ளுங்கள் என்று நிறையபேர் சூழ்ந்துக்கொண்டனர், நாங்கள் ஒரு வரை தேர்ந்தெடுக்க அவர் அங்கு இருந்த ஒரு சிறிய அலுவலகத்தில் (பேருந்து நிலையத்திலேயே) எங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ள சொன்னார், கோவிலுக்கு செல்பவர்கள் அனைவரும் அங்கு பதிவு செய்ய வேண்டுமாம். பதிவு செய்ததற்கு ஒரு ரசிது கொடுத்தார்கள்.

பின்பு கடைவீதி வழியாக எங்களை ஒரு விடுதிக்கு அழைத்துச்சென்றார், விடுதியில் குளித்துவிட்டு (வெந்நீரில்) விடுதிக்கு அருகில் இருந்த கடைக்கு சென்றோம். என்னுடைய ப்ரிபெட் சிம் எடுக்கவில்லை ஆனால் நண்பனின் போஸ்ட்பெட் எடுத்தது ப்ரிபெட் சிம் இந்த மாநிலத்தில் எடுக்காது பாதுகாப்பு காரணத்திற்காக தடைவிதித்திருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன், புகைப்பட கருவி எடுத்து வராததால் வாடகைக்கு ஒரு டப்பா புகைப்பட கருவியை எடுத்தோம். நண்பன் சூ போட்டுக்கொண்டே மலைக்கு போகலாம் என்று கூற, கூடவே கூடாது வெறும் காலுடன் தான் நடக்கவேண்டும் என்று கூறிவிட்டேன். கோவில் மலை அடிவாரத்துக்கு செல்லும் பொழுதே ஒரு சிறுவான் கையில் எண்ணையுடன் குறிக்கிட்டு அண்ணே காலுக்கு மசாஜ் செஞ்சிகிட்டு போங்க என்று கூற வேண்டாம் என்று கூறி நடையை கட்டினோம்.

மலையடிவாரத்திலேயே நன்கு பரிசோதனை நடைபெறுகின்றது. பரிசோதனைக்கு பின் பல கடைக்களில் பாரம்பரிய உடையை உடுத்தி புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். சிறிது தூரத்திலேயே ஒரு இடத்தில் அன்னதானம் வழங்க அங்கு உணவருந்த வேண்டும் அது நல்லது என்று குப்தா கூறினான். நானும் சம்மதித்து உணவருந்த சென்றேன், கட்டட வேலை செய்பவர்கள் பரிமாருவதுபோல இருந்தது, தினமும் ஆயிரகணக்கில் மக்களை காணும் அவர்களின் கடினம் புரிந்தாலும் அவர்களின் பரிமாறும் முறையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பக்தர்களின் பொருட்களை சுமக்கவும், குழந்தைகளை சுமக்கவும் அதிகம் தாடி வைத்த முகமதியர்கள் உதவுகிறார்கள், ஒரு இந்து கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு உதவும் முகமதியர்களை பார்க்க முடிந்தது. சிமென்ட் சாலை கோவில் வரை அந்த மலையில் போடபட்டிருகின்றது. கட்ராவிலிருந்து 12 கி.மீ மலையில் நடந்தே செல்லவேண்டும் பாதி வழியில் ஒரு குகை கோவில் இருக்கின்றது அங்கு தான் மாதா (வைஷ்ணவா தேவி) அரக்கனுக்கு பயந்து சிறிது காலம் தங்கியதாக என் நண்பன் கூறினான் அவன் இந்தி மற்றும் ஆங்கிலம் கலந்து ஒரு வழியாக கோவில் புராணத்தை கூற ஏண்டா இவ்வளவு சக்தி வாய்ந்த தேவி ஒரு அரக்கனுக்கு பயந்து இந்த குகையில் தங்கினாங்க என்று நான் கேட்க, பதிலுக்கு ஒரு முறை முறைத்தான். குகைக்கு செல்லும் வழியில் (பெரிய வரிசையில்) பெரியவர்களின் கோசத்தை விட சிறியவர்களின் கோசம் பலமாக இருந்தது " ஜெய் மாத்தா தி" , "வைஷ்ணவோ மாதாக்கி ஜெய்" பலமுறை ஒலிக்கப்பட்டது.



குகைக்கு செல்லும் முன்பு பரிசோதனை பலமாக நடந்தது. தேவி இருந்ததாக கூறப்படும் குறையை நன்கு மொழுகி (ரப்பர் போன்று இருந்தது) வைத்திருக்கின்றனர் யாருக்கும் சிறு கீறல் கூட விழக்கூடாது என்ற நல்லெண்ணத்தினால் இருக்கலாம். குகைக்குள் நான் சிரமமில்லாமல் சென்று வந்தேன் நம்ம குப்தா கொஞ்சம் கடினப்பட்டார். குகை கோவிலுக்கு அடுத்து பயணத்தை தொடர்ந்தோம் செருப்பு இல்லாமல் நடந்ததால் கால்களில் வலி எடுத்தது (சிமெட் தரை தேய்ன்திருங்ததால்) புதியதாக போடாபட்டிருந்த சாலைகளில் செல்லும் பொழுது வலி இல்லை. இந்த கோவிலுக்கு சென்று வந்தால் விரைவில் திருமணம் நடக்குமாம் அதே போல வடஇந்தியர்கள் திருமணமான பின் கண்டிப்பாக இங்கு வருவதை எழுத படாத சட்டமாக வைத்திருகிறார்கள் என்றும் கூறினான்.

கட்டி சாதம் கட்டிக்கொண்டு குடும்பம் குடும்பமாக வந்தவர்களை பார்க்க முடிந்தது. பல மாநிலங்களிலிருந்து இது போல வந்திருந்தனர். திடிரென்று தகரசத்தங்கள் கேட்டது, வழியெங்கும் நிறைய தகர பந்தல்கள் போட்டிருன்ததன் காரணம் அப்பொழுதான் புலப்பட்டது, கற்கள் மலையிலிருந்து உருண்டுவருவது பக்தர்கள் மீது படாமலிருக்கத்தான் அந்த ஏற்ப்பாடுஎன்று. ஒரு வழியாக மாலையில் கோவிலை அடைந்தோம் இந்த முறை இன்னும் சோதனை பலமாக இருந்தது தோலில் செய்யப்பட்ட எந்த பொருட்களும் உள்ளுக்குள் அனுமதிக்கப்படவில்லை, சோதனை சாவடி அருகிலேயே பாதுகாப்பு பெட்டகங்கள் இருக்கின்றன. சோதனையை முடித்து உள்ளே சென்றால் பெரிய வரிசையில் காத்திருக்கவேண்டி இருந்தது எங்களுக்கு முன்பும் பின்பும் இருந்தது புதுமண தம்பதிகள், அவர்களை பார்த்துவிட்டு நானும் தான் வந்திருக்கேனே உன்கூட என்று கூற நண்பன் கோபமாகிவிட்டான்.

(வைஷ்ணவாதேவி கோவில்)


நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகு வரிசை நகர ஆரம்பித்தது ஒரு பெரிய தேவி படம் இருந்ததை பார்த்து அது தான் கருவறை என்று எண்ணிக்கொண்டேன் அனால் இன்னும் வரிசை வேறு எங்கோ சென்றதால் தொடர்ந்து சென்றேன் ஒரு குகை போல இருந்த இடத்துக்குள் சென்றோம் கருவறையை அடைந்த பின் எதோ ஒரு வித ஈர்ப்பு இருந்தது சிலைக்கு அருகில் செல்லும் பொழுது அங்கு எதோ ஒரு வித சக்தியை உணரமுடிந்தது என் பயண தொடக்கத்திலிருந்தே கொடைக்கானல் செல்வது போலத்தான் என் மனநிலை இருந்தது ஆனால் என்னால் எப்படி இதை உணரமுடிந்தது என்பதை நினைத்து ஆச்சரியமாக இருந்தது, நெடுநாட்கள் நாத்திகம் பேசி திரிந்தவனுக்கு திருவண்ணாமலை எதோ ஒரு சக்தி இருப்பதற்கான பிள்ளையார் சுழி போட மதுரா அதை வழிநடத்த வைஷ்ணவோ தேவி கோவில் அதற்க்கு முழுவடிவம் கொடுத்தது ஆனால் உருவமுள்ள கடவுளை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் இருந்துக்கொண்டே இருந்தது. இனம்புரியாத ஈர்ப்புக்கு கடவுள் என்று பெயர் கொடுத்து அதற்கான தேடலை நான் தொடங்க இந்த கோவிலும் முக்கியகாரணம் என்பதை மறுக்கயியலாது,

(வைஷ்ணவா தேவி)

கோவிலிலிருந்து வந்தபிறகும் ஆச்சிரியத்திலிருந்து என்னால் விடுபடமுடியவில்லை என் நண்பனிடம் கேட்க அவனுக்கும் அதே உணர்வு இருந்ததாக கூறினான். வழிபாட்டிற்கு கொடுத்த தேங்காய் பழத்திற்கு பதிலாக (கருவறைக்கு முன்பாகவே வாங்கிக்கொள்ளபடும்) வேறு தேங்காய் பலம் மற்றும் ஒரு பாகெட் கல்கண்டு கொடுத்தார்கள். அதோடு ஒரு சிறிய நாணயவடிவில் வைஷ்ணவோ கோவில் முத்திரை அச்சு பொறிக்கப்பட்டு இருந்தது. கோவிலை விட்டு வெளியேறும் பொழுது நன்றாக இருட்டிருந்தது கால் வலி வேறு, பேட்டரியால் இயங்கும் சிறியவாகநத்தை கொண்டு பாதி தொலைவு வரை கொண்டு விடுகின்றனர் அனால் அங்கு சென்று பார்க்க வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் என்று எழுதபட்டிருந்தது. வேறு வழியில்லாமல் நடந்தே செல்லவேண்டி இருந்தது.

பாதி வழியிலே நன்றாக மழை பிடிக்க நினைந்துக்கொண்டே இறங்கினோம். நீண்ட நேர பயணத்திற்கு பிறகு ஒரு கடையில் தேநீர் அருந்திவிட்டு மீண்டும் நடக்கதொடங்கினோம் கட்ராவை அடைந்தபின் எங்கள் விடுதியை கண்டுபிடிக்க நெடுநேரம் பிடித்தது, நல்ல ஓய்வுக்கு பின் அடுத்தநாள் காலை குளித்துவிட்டு மலையை பார்க்க பனி மூடிருந்தது அட நாம மேல இருக்கும் போது இல்லையே என்ற வருத்தம் தொற்றிக்கொண்டது. ப்லிம் ரோலை வைத்துக்கொண்டு அந்த ஓட்ட காமெராவை கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு கடைவீதிக்கு சென்று வேண்டியதை வாங்கிக்கொண்டோம் அப்பொழுதே மதியமாகிவிட்டது. டில்லிக்கு பேருந்து இல்லாததால் சண்டிகர் பேருந்தில் ஏறி பத்தான்கோட்டில் இறங்கிக்கொண்டோம்.

பத்தான்கோட்டில் பேருந்து நிலையத்திற்கு சற்று மும்பே இருந்த மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தின் நடுவில் நின்றுக்கொண்டு பேருந்துக்காக காத்திருந்தோம் நீண்ட நேரத்திற்கு பின் ராஜஸ்த்தான் போக்குவரத்து கழக பேருந்து வந்தது அதில் ஏறிக்கொண்டோம். முதன் முதலில் எந்திரத்தை கொண்டு நடத்துனர் பயணசீட்டு கொடுத்ததை இங்கு தான் பார்த்தேன் நம்ம ஊரிலும் வந்தால் எப்படி இருக்கும் என்று என்னினேன் (அப்பொழுது தமிழகத்தில் இந்த முறை கிடையாது ) நண்பன் அவன் சொந்த ஊரில் இறங்கிக்கொண்டான், ஜலந்தரில் தேநீருக்காக வண்டி நிறுத்தப்பட்டது அங்கு தேநீர் குடித்து விட்டு உறங்க டில்லி வந்தப்பின் நடத்துனர் எழுப்பித்தான் எழுந்தேன்.

நான் சென்ற கோவில்களிலேயே காசுக்கு மதிப்பு கொடுக்காத ஒரு கோவில் இதுதான் , மீண்டும் செல்லவேண்டு என்று எண்ணம் தோன்றியது ஆனால் இன்று வரை அந்த வாய்ப்பு அமையவில்லை.
(படங்கள் இணையதளங்களிலிருந்து எடுக்கப்பட்டது நாங்கள் வாடகைக்கு எடுத்த புகைப்படகருவியிலிருந்து படங்கள் மிகவும் அற்புதமாக வந்ததால் இங்கு கொடுக்கவில்லை)

மதுரா, ஆக்ரா


ஆக்ரா பக்கத்தில் தானே இருக்கு ஒருநாள் போய் தாஜ்மஹால பாத்துட்டு வந்துடலாம் என்று என் அறை நண்பர்கள் இருவரிடமும் கேட்டேன். ஏற்கனவே அவர்கள் அங்கு சென்றிருந்ததால் வர மறுத்துவிட்டார்கள். அலுவலக நண்பனும் வர மறுத்த நிலையில் ஒரு டிராவல்ஸ்சில் விசாரித்து ஒரு நாள் பேக்கேஜ் ட்ரிப்க்கு முன்பதிவு செய்தேன்.

விடியற்காலையில் சொன்ன நேரத்தைவிட ஒரு மணிநேரம் கழித்து ஒரு காரில் வந்து என்னை வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு சென்றனர். அந்த வண்டி நேராக தென் டெல்லியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு அழைத்து சென்றது அங்கு என்னை இறக்கிவிட்டு ஒரு வண்டி என்னை கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர். ஒருமணிநேரம் கழித்து ஒரு பேருந்து அந்த என்னை சுமந்து வந்தது அட பள்ளிகூட சுற்றுலா போல இருக்கும்போல என்று எண்ணிக்கொண்டு வண்டியில் ஏறி பார்க்க வண்டி முழுவதும் நிரம்பிருந்தது நடுவில் ஒரு இருக்கையில் ஒருவர் மட்டும் அமர்ந்திருக்க அருகில் அமரசொன்னார்கள், சன்னலுக்கு அருகில் அமர விருப்பபடுபவர்களில் ஒருவன் என்பதால் அந்த இருக்கை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வண்டியின் இறுதி வரிசையில் சன்னலோரத்தில் அமர்ந்துக்கொண்டேன்.

என்னருகில் இரண்டு பெரியவர்கள் வெள்ளைநிற உடையில் தலையில் வெள்ளை தொப்பியுடன் அமர்ந்திருந்தனர், தாங்கள் வட கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என்று அறிமுகபடுத்திக்கொண்டனர் வண்டியில் என்னைத்தவிர தமிழர்கள் இல்லை. இந்த பயணம் ஒரு தினுசாகத்தான் இருக்கபோகின்றது என்று எண்ணிக்கொண்டேன். அவர்கள் பேசிக்கொண்டிருந்த கன்னட வார்த்தைகளை எனக்கு தெரிந்த வார்த்தைகள் கொண்டு பொருத்திப்பார்த்தேன் ஒன்றும் பொருந்தவில்லை. பிறகு அவர்கள் கன்னடத்தை பற்றி தெளிவாக கூறினார்கள். பெங்களூர் கன்னடா என்பது தமிழ் கலந்த கன்னடா என்பதால் தமிழர்களுக்கு ஓரளவுக்கு புரியும் என்று கூறினார்கள். அதே போல் மங்களூர், வட கர்நாடகாவில் பேசும் கன்னடாவையும் பற்றி கூறக்கேட்டுக்கொண்டேன். வழியில் உணவிற்காக ஒரு உணவகத்தில் நிறுத்த ஒரு காபி மட்டும் வாங்கி குடித்துக்கொண்டேன்.

வண்டி சிறிது நேரத்தில் ஆக்ராவை நோக்கி கிளம்பியது அப்பொழுதுதான் தெரிந்தது ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருமாதறி பயணத்திற்கான பணம் வாங்கியது. இரண்டு மூன்று டிராவல்சை விசாரித்து ஏறுவது நல்லது என்றும் கூறினர் பின்பு தான் எனக்கு தெரியும் பல நிறுவனங்கள் தினமும் இது போல் தாஜ்மகாலை பார்க்க பயணம் ஏற்பாடு செய்கிறார்கள் என்று, பேசிக்கொண்டிருக்கும் பொழுதே நாங்கள் சென்ற பேருந்து அங்கும் இங்குமாக சாலையில் நடனமாடிக்கொண்டிருந்தது , ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் சாலையின் ஒரு ஓரத்தில் சென்று வண்டி நின்றது. டெல்லி - ஆக்ரா சாலை நாட்டின் முக்கியமான சாலைகளில் ஒன்று அதிக வண்டிகள் செல்லும் அந்த சாலையில் விபத்திலிருந்து தப்பியதே பெரியவிசயமாக தோன்றியது. வெடித்திருந்த டயரை கழட்டிவிட்டு ஏற்கனவே இருந்த டயரை ஓட்டுனர் மாற்றினார்.

வண்டி மதுராவை கடந்து ஆக்ரா கோட்டையை நோக்கி நகர்ந்தது சிறிது நேரத்திலேயே ஆக்ரா கோட்டையை அடைந்துவிட்டோம். இப்பொழுது ஒரு கைடு எங்களுக்காக அனுப்பபட்டிருந்தார். அவர் பெரும்பாலும் இந்தியில் கோட்டையை பற்றி சொல்லிக்கொண்டு வந்தார். பளிங்கி கட்டடத்தில் பதிக்க பட்டிருந்த சிகப்பு, ஊதா நிற கற்களை இமைகொட்டாமல் பார்க்க தோன்றியது. கட்டடகலை மிகவும் அற்புதமாக இருந்தது. பளிங்கினால் கட்டப்பட்டது அதன் கூடுதல் சிறப்பு. அரசரின் படுக்கையறையில் சுவர்களின் மத்தியில் இரண்டு குழிகளை காட்டினர். வெய்யில் காலத்தில் குளிந்தநீர் ஊற்றி குளிர்சாதன அறையாகவும் மற்றும் குளிர்காலத்தில் வெந்நீர் ஊற்றி அந்த அறையை வெதுவெதுபாகவும் வைத்துக்கொள்வார்கள் என்று கூறினார் அங்கிருந்து தாஜ்மகாலை பார்க்க அழகாக இருந்தது. அந்த கூட்டத்திலிருந்து தனியாக பிரிந்து மீனா பஜார்(பெண்கலுக்கு மட்டும் தான் அனுமதியாம் அந்த காலத்தில், இப்பொழுது காட்சிபொருள்), அரசவை, தூண்கள், கட்டடங்கள் அதில் உள்ள ஓவிங்கள் என்று ஒன்றுவிடாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். கொடுத்த நேரம் முடிவதற்குள் வண்டிக்கு திரும்பினேன்.




மதிய உணவிற்காக ஒரு உணவகத்தில் நிறுத்தப்பட்டது அங்கு நம்மஊர் சாப்பாடு கிடைத்தது. உணவை முடித்துவிட்டு நேராக தாஜ்மகாலை நோக்கி புறப்பட்டோம் ஒரு குறுப்பிட்ட தூரத்திற்கு மேல் பொது வாகனங்களுக்கு அனுமதி கிடையாது அதனால் அங்குகிருந்து ஓட்டகவண்டி அல்லது சிறிய பேருந்தில் செல்லலாம், நாங்கள் சிறிய பேருந்தில் சென்றோம். வெளிநாட்டவருக்கு அதிகமாக நுழைவுகட்டணம் வசுலிக்கப்பட்டது. இந்தியர்களுக்கு குறைவுதான், உலக அதிசியத்தில் ஒன்று என்பதைவிட சிறுவயதில் இருந்து பிரமிப்பாக கேட்ட ஒன்றை பார்க்கபோகின்றோம் என்ற மகிழ்ச்சி இருந்தது. காவலர் சோதனைகளுக்கு பின்பு பொறுமையாக நடந்து சென்று இடதுபக்கம் திரும்பிய பொழுது சற்று தொலைவில் இருத்த தாஜ்மகாலை பார்த்தேன். அதே இடத்தில் சிறிது நேரம் நின்றுக்கொண்டு அதன் அழகை பார்த்துக்கொண்டிருந்தேன் என்னைப்போல் பலரும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

தாஜ்மகாலை நோக்கி மெதுவாக நடக்கத்தொடங்கினேன் இரண்டுபக்கமும் புல்வெளிகள் மரங்கள் இருந்தன கட்டடத்தின் அருகில் காலணியை கழட்டிவிட்டு படிக்கட்டுகளின் வழியாக மேலே சென்று தாஜ்மஹாலுக்குல் நுழைந்தேன் அழகிய வேலைபாடுகளுடன் அந்த இடம் அற்புதமாக இருந்தது அதன் மைய்ய பகுதியில் அமைந்த கல்லறையை பார்த்தேன், அதன் மீதும் கலைநயத்துடன் வேலைபாடுகள் இருந்தது. கல்லறையை பார்க்கும் பொழுது அதற்குமுன் அங்கு கோவில் இருந்தது என்று என் நண்பன் கூறியது நினைவுக்கு வந்தது (மெய்யோ பொய்யோ எனக்கு தெரியாது) வெளியே சென்று அந்த மகாலின் பின் பகுதிக்கு சென்றேன். அழகான சூழல் அங்கிருந்து அருகில் ஓடிக்கொண்டிருக்கும் யமுனா நதியை பார்க்க அற்புதமாக இருக்கும். நதியில் ஓரிரு படகுகள் சென்றுகொண்டிருந்தது முழங்கால் உயர தடுப்பு சுவற்றுக்கு அருகில் அமர்ந்துக்கொண்டு (பின் புறம்) நதியை பார்ப்பதற்கு அழகாக இருந்தது, தாஜ்மகாலை விட அதன் பின் புறத்தில் அமர்ந்து நதியை பார்ப்பது மிகவும் பிடித்திருந்தது. குளிர்காலத்தில் சென்றதால் வெய்யில் இல்லை. (நண்பர்களுடனான அடுத்த பயணத்தில் மாலையிலிருந்து இருட்டும்வரை அதே இடத்திலிருந்து நதி மற்றும் தாஜ்மகாலை பார்க்க வாய்ப்புகிடைத்தது, அப்பொழுது தனியாக வாகனத்தில் சென்றதால் நேரத்தை கவனத்தில் கொள்ளவில்லை) கொடுக்கப்பட்ட நேரம் முடிந்து சிறிது நேரம் கழித்து வண்டிக்கு சென்றேன். ஆனால் என்னையும் சேர்த்து வண்டியில் பத்துப்பேர் கூட இருக்கவில்லை, அனைவரும் வரும் வரை காத்திருந்து வண்டி மதுராவை நோக்கி புறப்பட்டது.




வண்டி மதுராவை அடைந்ததும் நேராக கிருஷ்ணன் கோவிலுக்கு கூட்டிசென்றனர், கோவிலுக்குள் நுழையும் பொழுது கொண்டு சென்ற அனைத்து பொருட்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது, பையில் இருந்த தங்கராஜா வடிகட்டி மென்சுருட்டாரும் அவரது நண்பர் லைட்டரும் குப்பையில் தூக்கி வீசப்பட்டனர். பிறகு உடலை பரிசோதிக்கும் பொழுது நான் நெளிந்து கொண்டிருப்பதை பார்த்து இன்னும் திருமணம் ஆகவில்லையா என்று அந்த காவலர் கேட்டக, ஆமாம் என்று கூறினேன் உடனே கோவில் கோபுரத்தை பார்த்து பகைவன் சீக்கிரம் இவனுக்கு திருமணமாக அருள்புரி என்று அவர் கூற சிரித்துக்கொண்டே கோவிலுக்குள் நுழைந்தேன்


துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு மூலைக்கு மூலை காவலர்கள் நின்றுக்கொண்டிருந்தனர் எதேச்சையாக மேலே பார்க்க படங்களில் வருவது போல் ஆங்காங்கு காவலர்கள் நின்றுக்கொண்டு துப்பாக்கி வைத்துக்கொண்டிருந்தனர்.
கிருஷ்ணர் பிறந்த இடத்தில் அவரது படம் வைத்திருக்கின்றனர் நம்ம ஊர்களில் மிக பழையவீடுகளுக்குள் செல்வது போன்ற உணர்வு இருந்தது. அந்த இடத்தை பார்த்து பெரியதாக ஈர்ப்பு ஏதும் ஏற்ப்படவில்லை. (அடுத்த இரண்டு பயணங்களிலும் கூட) அங்கு ஒரு வயதான பெண்மணி இந்தியில் கிருஷ்ணன் புகழை பாடிக்கொண்டிருந்தார். பிறகு அந்த இடத்தை ஒட்டி மண்டபம் போல் இருந்த கோவிலுக்கு சென்றேன், சிலைக்கு திரை போட்டு மூடிருந்ததால் சிறிது நேரம் அங்கு அமர நேர்ந்தது கண்களை மூடிக்கொண்டு எதையோ நினைத்துக்கொண்டிருந்தேன். கண்களை திறந்து பார்க்கும்பொழுது திரைவிலகிருந்தது பளிங்கிபோன்ற கிருஷ்ணா, ராதா சிற்பம் கடவுள் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு கவர்ந்தது (அப்பொழுது எனக்கு கடவுள் நம்பிக்கை அவ்வளவாக கிடையாது). அதோடு அந்த சிலையை பார்பவர்களுக்கு கட்டாயம் திருமணம் செய்துகொள்ள தோன்றும் (திருமணம் ஆகாதவர்களுக்கு ), எனக்கு உடனே அந்த காவலரின் நினைப்பு வந்தது. கொடுத்த நேரம் முடிந்திருந்ததால் வண்டியை நோக்கி புறப்பட்டேன். அடுத்த இரண்டு பயணங்கள் மதுரா செல்ல அந்த சிலை என்னை கவர்ந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.




வண்டி இப்பொழுது பிருந்தாவனை நோக்கி சென்றது அங்கு பல சிறு சிறு கோவில்கள் இருக்கின்றன முதல் முறை அங்கு சென்றபொழுது எனக்கு அது தெரியாது பிருந்தாவன் என்றால் ஒரு குறுப்பிட்ட புகழ் பெற்ற கோவிலுக்குத்தான் கூட்டிசெல்வார்கள் என்று நினைத்துவிட்டேன். அங்கு காசுக்கு இருந்த மரியாதை கிருஷ்ணனின் புகழை மிஞ்சிருந்தது. எனக்கு அன்று கூட்டி சென்ற கோவில் பிடிக்கவில்லை (இரண்டாவது முறை சென்ற கோவில் பிடித்திருந்தது கோவில் பெயர் நினைவில்லை) மதுரா மற்றும் பிருந்தாவனும் லெஸ்ஸி மற்றும் பால் பொருட்களுக்கு புகழ்பெற்றது, பார்க்கும் இடங்களில் எல்லாம் கிடைக்கும். லெஸ்ஸி மிகவும் நன்றாக இருந்தது.

பயணம் முடிந்து டெல்லியை நோக்கி கிளம்பினோம், இரவு பன்னிரெண்டை தாண்டியப்பின்தான் நான் ஏறிய இடத்துக்கு சென்றோம் பெட்ரோல் நிலையத்தின் எதிர் திசையில் இறங்கி, டிராவல்சுக்கு அழைக்க ரிங் போய் கொண்டே இருந்தது ஒருவரும் எடுக்கவில்லை, இனி இவர்களை நம்புவது வீண் என்று முடிவுசெய்து, அருகில் இருந்த ஆடோவை கேட்க வரமுடியாது என்று கூறிவிட்டார், வேறு ஆடோக்க்காக காத்திருந்து காத்திருந்து மணி ஒன்றுக்கு மேல் கடந்துவிட்டது. அருகில் ஒரு சுமோ போன்ற வண்டியில் இடுப்பில் கை துப்பாக்கியுடன் இருந்த காவலரிடம் எங்கு ஆட்டோ கிடைக்கும் என்று கேட்க அவர் பழைய ஆட்டோகாரரையே கை காட்டினர், அவர் வர முடியாதுன்னு கூறிவிட்டார் என்று கூற. என் கூட வா என்று அழைத்து சென்றார். ஏன் போகமாட்டேன்கிற என்று அவர் கேட்க சார் எனக்கு அங்க போக பெர்மிட் இல்ல என்று கூறி வேறு எங்கோ சென்ற ஆட்டோ ஒன்றை நிறுத்தி ஒரு இடத்தில் இறங்கி மாறிக்கொள் என்று அனுப்பிவைத்தார்.

அந்த ஆட்டோவில் என்னைத்தவிர ஐந்தாறு பேர் இருந்திருக்கக்கூடும். வண்டி ஓட்டுனரிடம் நான் போக வேண்டிய இடத்தை சொல்ல ஐயோ இது பரிதாபாத் போகுது என்று கூறிகொண்டிருக்கும் பொழுதே நிறுத்துங்கள் என்று கூறி ஒரு பாலத்திற்கு அடியில் இறங்கிக்கொண்டேன்.(இருந்த இடத்திலிருந்து இரண்டு கி.மீ கடந்திருப்போம்) பயபுள்ள ஏமாத்தி ஏத்திவிட்டுடானே என்று எண்ணிக்கொண்டு அடுத்த வண்டிக்காக காத்திருந்தேன். எந்தவண்டியும் நிற்கவில்லை. வேறு வழியில்லாமல் பாலத்திற்கு கீழ் ஒரு ஆடோவுக்குள் தூங்கிகொண்டிருந்தவரை எழுப்பி போகவேண்டிய இடத்தை சொல்லி வண்டி எதுவும் நிற்க்கமாட்டேன்கிது என்று கூற, இங்க எந்த வண்டியும் நிற்காது என்று கூறி, என் நிலைமையை பார்த்து என்னுடன் வர சம்மதித்தார், பர்மிட் இல்லாததால் அக்க்ஷ்யதாமை தாண்டி விட்டுவிடுகிறேன் அதற்க்கு மேல் வரமுடியாது என்று கூற நான் எதுவும் பேசாமல் சம்மதித்தேன்.

அக்க்ஷயதாமை தாண்டி என்னை இறக்கிவிட்டவுடன் மிக்கநன்றி என்று கூறி அவரை அனுப்பிவிட்டு அடுத்தவண்டிக்காக காத்திருந்தேன். செய்தித்தாள் எடுக்கவந்தவர் ஆடோவை நிறுத்த, நான் சவாரி ஏத்தக்கூடாது ஆனா உங்களை இந்தியன் ஆயில் வரை வேண்டுமானால் விட்டுவிடுகிறேன் என்று கூறி ஏற்றிக்கொண்டார் அங்கு சென்றவுடன் அவரை கூட்டிக்கொண்டு இரவு கடைக்கு (தள்ளுவண்டி கடை, அதுமட்டும்தான் இருக்கும் இரவில்) சென்று தேநீர், தங்கராசாவை வாங்கிகொடுத்து மற்றும் பேசியதொகையை(அவர் கேட்டதொகையை) கொடுத்துவிட்டு தங்கராஜா வடிகட்டி மென்சுருட்டாரை துணைக்கு அழைத்துக்கொண்டு வீட்டுக்கு நடக்கத்தொடங்கினேன் (அதற்குள் அதிகாலை ஆகிவிட்டது)

அடுத்தானாள் அந்த டிராவல்ஸ் எண்ணுக்கு தொடர்புகொள்ள தொடர்ந்து அழைத்துக்கொண்டே இருந்தேன் ஆனால் யாரும் எடுக்கவே இல்லை...

(நான் பயணத்திற்கு முன்பதிவு செய்தது தொலைபேசியில், காசு வீடுதேடி வந்து வாங்கிக்கொண்டனர் அதனால் இறுதிவரை அந்த டிராவல்ஸ் எங்கு இருக்கின்றது என்றே பார்க்கவேயில்லை)

ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ்

*
நானும் எனது வடஇந்திய நண்பனும் ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் செல்ல திட்டமிட்டு காஷ்மிரி கேட் பேருந்து நிலையத்தை இரவு சென்றடைந்தோம். தேராதூநிலிருந்து ரிஷிகேஷ் செல்லும் வழியின் இருபக்கமும் அழகாக இருக்கும் என்று என் அலுவலக நண்பர் ஒருவர் சொன்னதால். தேராதூன் பேருந்து எடுத்து செல்லலாம் என்று என் நண்பனிடம் சொல்ல, அது ரொம்ப சுத்து என்று அவன் சொல்ல, அது எனக்கு தெரியும் நீ சும்மா வா என்று கூறிக்கொண்டே தேராதூன் பேருந்தில் ஏறினேன் நண்பனும் "பாகல்" என்று என்னை திட்டிக்கொண்டே என் அருகில் வந்தமர்ந்தான்.

வண்டி கிளம்பியது, முதல் முறை உத்ராஞ்சல் செல்வதால் சன்னல் அருகில் அமர்ந்துகொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டே சென்றேன். என் நண்பன் முனகிக்கொண்டே வந்தான். விடியற்காலை தேராதூன் பேருந்து நிலையத்தை அடைந்தோம். ஒரு மாநில தலைநகர பேருந்துநிலையமா என்று வெறிச்சோடி கிடந்தது கேள்விகேட்கவைத்தது. இருந்தாலும் நமக்கு காபி தானே முக்கியம் என்று ஒரு காபி வாங்கி குடித்துக்கொண்டு இருக்கும் பொழுதே ஹரித்வார் பேருந்து வந்து சேர்ந்தது, முதல் ஆளாக பயணசீட்டு வாங்கிகொண்டு மீண்டும் வலது சன்னலோரம் அமர்ந்துகொண்டேன்

இரவு சரியாக தூங்காததால் தூக்கம் என்னை துரத்திக்கொண்டிருந்தது.. இருந்தாலும் இவ்வளவு தூரம் சுற்றிக்கொண்டு வந்தது வீனாங்கி விடக்கூடாது என்று வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தேன். வந்தது வீண்போகவில்லை என்று அந்த இயற்க்கை அழகு நிறுபித்தது, ஆனால் என்நன்பன் அதை பார்க்க கொடுத்துவைக்காமல் தூங்கிவிட்டான். ஹரித்துவாரை அடைந்தவுடன். நேராக குளிக்க நண்பன் கூட்டிச்சென்றான் கங்கைல தான் குளிக்கணும் என்று கூட்டிசென்றான், நான் முதன்முதலில் கங்கையை பார்த்தது அங்குதான். தெளிந்த தண்ணீர், கொஞ்சம் அசந்தால் அடித்துசென்றுவிடும் போலிருந்தது நீரின் வேகம், மிக அதிகமாக கூட்டம் இருந்ததால் மெதுவாக குளித்துவிட்டு பக்கத்தில் இருந்த கோவிலுக்கு சென்று வந்தோம். பிறகு ரோப் கார் வழியாக மானச தேவி கோவிலுக்கு செல்ல திட்டமிட்டோம், ஆனால் ரோப் காரில் செல்ல கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் வேறு வழியில்லாமல் நடந்தே சென்றோம்.






நம்பிக்கை அவ்வளவாக இல்லாததால் ஏதோ பேருக்கு சென்றது போல கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பினேன். இதுக்கு மேல இங்க வேணாம் நாம ரிஷிகேஷ் செல்லலாம் என்று ஒரு வண்டியில் ஏறினோம் நின்றுகொண்டிருந்த ஒரு பெரிய சிவன் சிலையை கடந்து சென்றோம். ரிஷிகேசில் ராமன் ஜுலா அருகில் அந்த வண்டிகாரர் இறக்கிவிட்டார், ராமன் ஜுலா வழியாக கங்கையை கடந்து அருகில் இருந்த ஹோட்டலில் ஒரு அறை எடுத்துக்கொண்டோம், சிறிது ஓய்வுக்கு பின், ரிஷிகேசை சுற்ற கிளம்பினோம்.

கங்கை நதி மிக அகலமாக இருந்தது, இரு கரைகளுக்கும் செல்ல படகு சவாரி இருக்கின்றது மற்றும் ராமன் ஜுலா, லக்ஷ்மன் ஜுலா என்று இரண்டு தொட்டில்கள்(பாலங்கள்), இருக்கின்றது.(லக்ஷ்மன் பாலம் எங்கிருக்கின்றது என்று ஒருவரை நான் கேட்க பாலம் அல்ல தொட்டில் என்று சொல்லவேண்டும் என்று முறைத்துக்கொண்டு சென்றார்), ஊரில் பாதிக்குமேல் வெளிநாட்டவர், அவர்களில் பெரும்பாலோனோர் காவி உடையில் அலைந்துகொண்டிருந்தனர். நிறைய சாமியார்கள் காவிவுடையில் இருந்தனர். மற்றும் திரும்பி இடம் எல்லாம் தியானபயிற்சி விளம்பரங்கள் இருந்தது.

ராமன் ஜுலா அருகில் இருந்த கோவிலுக்கு சென்றோம், பிறகு தேநீர் குடித்துவிட்டு கங்கையின் கரையில் மெதுவாக நடந்து சென்றோம். சிறு சிறு குழுக்களாக தியான பயிற்சி செய்துகொண்டிருந்தனர், ஒருசில வெளிநாட்டவர் அதிகமுடி வளர்த்துக்கொண்டு சாமியார் போல் காட்சியளித்தனர். சிறிது தூரத்திலேயே ஆற்று மணலில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். சுற்றிருந்த மலைகள் கங்கைக்கு மேலுமும் அழகு சேர்த்தது. இங்கிருந்து தான் இமயமலை ஆரம்பிக்கிறது என்று தெரிந்ததும் ஒருவித மகிழ்ச்சி என்னுள் பரவியது, நதியின் சத்தத்தை தவிர வேறு எதுவும் கேட்கவில்லை அவ்வளவு அமைதியாக இருந்தது.

சிறிது நேரம் அமர்ந்துவிட்டு செல்லலாம் என்று முடிவெடுத்து ஆற்று மணலில் தனி தனியே அமர்ந்துகொண்டோம். எதிர் கரையில் முட்செடிகளுக்கு நடுவே யாரோ அமர்ந்திருப்பது போல் தோன்றியது ஆற்றின் அகலம் அதிகம் என்பதால் சரியாக தெரியவில்லை, உடனே புகைப்பட கருவியை கொண்டு ஜூம் செய்து பார்க்க ஒரு யோகி தியானம் செய்துகொண்டிருந்தது தெரிந்தது, அனால் முட்செடிகளுக்கு நடுவில் அந்த இக்கட்டான இடத்தில கடினப்பட்டு சென்று தியானம் செய்வதன் நோக்கம் எனக்கு புலப்படவில்லை,

கங்கை நதியில் குழந்தை போல் சிறுது நேரம் விளையாடிவிட்டு மணலில் வந்தமர்ந்தேன். சிறிது நேரத்திலேயே அமைதி என்னை கவ்விகொண்டது நன்றாக உணரமுடிந்தது ஒருமுறை அங்கு வந்தவர் மீண்டும் மீண்டும் வருவதன் காரணம் ஏதோ புரிந்தது போல தோன்றியது. ஆனால் அதிகமானோர் காவயுடையில் திரிவதன் காரணம் புலப்படவில்லை. ஆதவன் வீட்டுக்கு கிளம்பி கொண்டிருப்பதை உணர்ந்து லக்ஷ்மன் ஜூலாவை நோக்கி பயணித்தோம். சிறிது நேர நடைபயணத்திற்கு பின் லக்ஷ்மன் ஜூலாவை அடைந்தோம். அருகில் இருந்த கோவிலின் ஒவ்வொரு தளத்திலும் அனைத்து வகையான லிங்கங்களும் இருந்தது. கோவிலின் மேல் தளத்திலிருந்து பார்க்க கங்கையின் வளைவு, லக்ஷ்மன் ஜுலா மற்றும் கங்கையில் ராப்டிங் செய்து கொண்டிருப்பவர்களை பார்க்க அழகாக இருந்தது.



(ராமன் ஜூலா)

(லக்ஷ்மன் ஜூலா)


லக்ஷ்மன் ஜூலாவை கடந்து சாலை வழியாக (எதிர் கரை), ராமன் ஜூலாவை நோக்கி பயணித்தோம். வழியில் லக்ஷ்மன் சிலையை கடக்கும் பொழுது. சுயநலமில்லாத ஒரு நல்ல மனிதன் லக்ஷ்மன். என்று என் அலுவலக தமிழ் சீனியர் எப்பொழுதோ சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. சிறிதுநேர நடைபயனத்திருக்கு பின் ராமன் ஜூலாவை அடைந்தோம் அறைக்கு செல்வதற்கு முன் ஒரு உணவகத்திற்கு சென்றோம். வெளிநாட்டவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது போல் தோன்றியது ஆனால் அதிக தாடியுடன் எங்களுக்கு எதிரில் அமர்ந்திருந்த வெளிநாட்டவருக்கும் எங்கள் கதி தான்.

எதிரில் இருந்தவர் தன்னை ஈரோப்பில் உள்ள ஒரு சிறிய நாட்டை சேர்ந்தவன் என்று அறிமுகபடுத்திக்கொண்டார். சில வருடங்களுக்கு முன் வந்தபொழுது இருந்த அமைதி இப்பொழுது இங்கு இல்லை மற்றும் மக்கள் தொகை அதிகரித்துவிட்டது அதனால் அமைதி போய்விட்டது என்று குறைபட்டுக்கொண்டார். மேலும் அவர் அமைதியை தேடி பத்ரிநாத் செல்லவிருப்பதாக கூறினார். ஏற்கனவே என் கூட வந்த நண்பன் பத்ரிநாத்தை பற்றி கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. அவர்கள் கூறியதை வைத்து ஒழுங்கற்ற பாதை மற்றும் கொடியமிருகங்கள் நடுவில் ஒரு பெரியமலை மீது அந்த கோவில் இருப்பதாக கற்பனை செய்துகொண்டேன் ஆனால் கண்டிப்பாக ஒரு நாள் அங்கு செல்லவேண்டும் என்ற எண்ணம் அப்பொழுது என்னுள் விதைக்கப்பட்டது. மேலும் அவரது மொழி சமஸ்கிருதத்தை ஒத்திருக்கும் என்று கூறினார். தியானம் கற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவுரைகளும் கிடைத்தது.

உணவை முடித்துக்கொண்டு அறைக்கு திரும்பும் வழியில் அமர்ந்திருப்பது போல் ஒரு பெரிய சிவன் சிலை தென்பட்டது அதன் அரிகில் ஒரு வெள்ளைக்கார பெண்மணி வெள்ளையுடையில் எதோ பொன்மொழிகளை அங்கு அமர்ந்திருப்பவர்களுக்கு சொல்லிக்கொண்டிருந்தார். அந்த சிலையின் அரிகில் செல்ல எனக்கு ஆவல் ஏற்பட சூவை கலட்டதொடங்கினேன்.. அதற்குள் அந்த பெண்மணி சூவுடனே வரலாம் என்று கூறினார். சிவன் சிலை அரிகில் செல்வதற்குள் எனக்கு குற்றஉணர்வு மேலோங்க. திரும்பி வந்து சூவை கழற்றிவிட்டு சிலையரிகில் சென்றேன் சிறிது நேரம் அங்கு அமர்ந்திருந்து இரவில் நிலவொலியில் கங்கையை கண்டுவிட்டு அறைக்கு திரும்பினோம்.

அடுத்தநாள் காலை அறையை காலிசெய்துவிட்டு கடைத்தெருவுக்கு சென்றோம் ராமன் ஜுலா அருகில் இருக்கும் கடைகளில் ருத்ராட்சம், ஸ்படிக மாலை கிடைக்கின்றது ஆனால் அசலா என்று பார்த்து வாங்குவது உங்கள் சாமர்த்தியம் அதே போல் ஓரிரு புத்தகசாலைகள் உள்ளன பெரும்பாலான ஆன்மீக புத்தகங்கள் இங்கு கிடைக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட தொகைக்கு மேல்வாங்கினால் தான் பண அட்டையை பயன்படுத்தமுடியும். பணமாக கையில் கொண்டு செல்வது நலம். அங்கிருந்து நேராக பேருந்து நிலையத்திற்கு சென்றோம். முக்கியசாலையில் இருந்து ஒரு சிறிய சாலை வழியாக பேருந்து நிலையத்திற்கு செல்லவேண்டும். அப்படி இக்கட்டான இடத்தில் பேருந்து நிலையத்தை வைத்திருந்த அரசாங்கத்தை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.

நல்ல குளிர் சாதனம் செய்யப்பட்ட பேருந்தை பிடித்து டில்லியை சென்றடைந்தோம். அடுத்தநாள் அலுவலகம் சென்றதும் என்னை கூட்டி சென்ற நண்பனுக்கு எங்கள் கூட வேலைசெய்யும் சக நண்பரிடம்(கொஞ்சம் வயதானவர்) இருந்து நல்ல திட்டு கிடைத்தது, நம்மஊர் பெரியவர்கள் காசிக்கு செல்வது போல் வடஇந்தியர்கள் ஹரித்துவார் மற்றும் ரிஷிகேஷ் செல்வார்களாம். வயசான காலத்துல போகவேண்டிய இடத்துக்கு இப்பவே என்னை கூடிட்டு போனதுக்குதான் அந்த திட்டு. ஆனால் எனக்கு என்னமோ ஹரிதுவார் மற்றும் ரிஷிகேஷ் அனைவரும் செல்ல அருமையான இடமாக தோன்றியது குறிப்பாக ஆன்மீக தேடல் உள்ளவர்களை வெகுவாக ஈர்க்கும்.

குறிப்பு : ஹரித்துவார் மற்றும் ரிஷிகேஷ் செல்பவர்கள், டில்லியில் காஷ்மிரி கேட்டில் இருந்து ரிஷிகேஷ் பேருந்தை எடுத்தால் ஹரித்துவாரில் இறங்கிகொள்ளலாம், ஹரித்துவாரில் இருந்து ரிஷிகேசுக்கு அறை மணிநேரத்தில் சென்றுவிடலாம்