பத்ரிநாத் - குப்தகாசி - கேதர்நாத் - பகுதி 1

*


பத்ரிநாத் செல்வது கடினம், பெரிய மலைகளை கடந்து செல்லவேண்டும், என்ற நண்பர்களின் வார்த்தைகள் என்னை கண்டிப்பாக அங்கு போகவேண்டும் என்று தூண்டியது. ஒருவாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு நானும் என் நண்பனும் செல்ல திட்டமிட்டோம். ஆனால் எனக்கு மட்டும் தான் விடுப்பு கிடைத்தது. முடிவு செய்யப்பட்ட பயணம் ஏன் தடைபடவேண்டும் என்று தனியாக கிளம்பினேன். அதற்க்கு சில நாட்களுக்கு முன்பே கேதர்நாத், பத்ரிநாத்,கங்கோதரி, யமுநோதரி போன்ற இடங்களின் வரைபடம் மற்றும் தொலைவுகளை இணையத்தில் தேடி எடுத்துக்கொண்டேன். எனது அணியில் பெரும்பாலோனோர் வடஇந்தியர்கள்தான் அனால் அவர்கள் யாரும் பத்ரி,கேதர் சென்றதில்லை, ஒரு நண்பர் அவரது நண்பரிடம் கேட்டு எப்படி போகவேண்டு என்று கூறினார்.


நண்பர் கூறியபடி ஒரு ஆட்டோவில் ஆனந்தவிஹார் பேருந்து நிலையத்திற்கு செல்ல அங்கு ரிஷிகேஷ் பேருந்து இருக்கவில்லை. தவறுதலாக வந்தது பிறகுதான் தெரிந்தது, தனியா வேற போகணும், எப்படி பட்ட ஊர் / மக்கள் என்று கூட தெரியாது நான் பேசும் இந்தியை வைத்து கண்டிப்பாக தென்இந்தியன் என்று தெரியும் சிலர் ஏமாற்றகூட பார்ப்பார்கள் இத்தனை எண்ணங்களுக்கு மத்தியில், இப்படியே வீட்டுக்கு திரும்பிடலாமா என்று யோசிக்க . ச்சி ச்சி வீட்டுல இருந்து கிளம்பி வந்தாச்சி இனிமேல் எதுக்கு திரும்பி போகணும், தெரியாத ஊர் புதிய அனுபவம் கிடைக்கும் என்று எதோ ஒரு நம்பிக்கையுடன் ஒரு டவுன் பேருந்தை பிடித்து காஷ்மிரிகேட் பேருந்து நிலையத்தை அடைந்தேன், பிறகு ரிஷிகேஷ் செல்லும் பேருந்தில் ஏற ஆறுமனிநேர பயணத்துக்குப்பின் அடுத்தநாள் காலை ரிஷிகேஷ் பேருந்துநிலையத்தில் இறங்கி ஒரு தேநீர் குடித்துக்கொண்டே பத்ரி, கேதர், கங்கோதரி, யமுநோதரி செல்வதற்காக இருக்கும் பேருந்துநிலையத்தை (திஹ்ரி பேருந்து நிலையம்) பற்றி விசாரித்து ஒரு ஆட்டோவில் ஏறி அந்த பேருந்து நிலையத்தை அடைந்தேன். காலை 5.30 மணியிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன, காலையிலேயே செல்வது சிறந்தது.


பேருந்துகள் சிறியதாக இருந்தன அதற்கான காரணம் அப்பொழுது தெரியவில்லை, இரண்டு பேருந்துகள் புறப்பட தயாராக இருந்தது ஒன்று கேதர்நாத்துக்கும் மற்றொன்று பத்ரிநாத்துக்கும் செல்லவிருந்து எதில் ஏறுவது என்று சிறு தயக்கம் வந்தது. பத்ரிநாத் செல்லும் பேருந்தில் இருக்கைகள் அதிகம் காலியாக இருந்ததால் அதில் ஏறிக்கொண்டேன். கடைசி வரிசையிலிருந்து மூன்றாவது வரிசையில் வலது சன்னலோரத்தில் அமர்ந்துகொண்டேன். சிறிது நேரத்திலேயே வண்டி நிரம்ப தொடங்கியது. ஜான்சியை சேர்ந்த ஒரு குடுபத்தினர் மகன் மகள்கள், மருமகன்கள், பேரகுழந்தைகள் உடன் வண்டியில் ஏறிக்கொண்டனர். குடும்ப தலைவர் எனது பக்கத்தில் வந்து அமர்ந்துக்கொண்டார், பலமாதங்கள் வெட்டப்படாத தலைமுடி, பலவாரங்கள் சவரம் செய்யாத முகம், டி.ஷர்ட் , சாட்ஸ் இது தான் என் அடையாளம். சிறுபையன் ஒருவன் கோவில் புராணங்களை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் விற்றுக்கொண்டிருந்தான் ஆங்கிலத்தில் ஒரு புத்தகத்தை வாங்கிக்கொண்டேன்.


வண்டி கிளம்பியவுடன் "பத்ரி விஷால்கி ஜெ" என்று கோஷங்கள் வண்டியிலிருந்து எழும்பின, வாங்கிய புத்தகத்தை படிக்க ஆரம்பித்து சிறிது நேரத்திற்கு பிறகு சன்னல்வழியாக வெளியே பார்க்க. சில மாதங்களுக்கு முன் நான் சென்ற லக்ஷ்மன் ஜுலா பாலத்தை உயரத்தில் இருந்து பார்க்க அற்புதமாக இருந்தது (ரிஷிகேஷில் இருந்து தான் இமயமலை ஆரம்பிக்கிறது), வண்டி மேலே செல்ல செல்ல கங்கை நதிக்கும் வண்டிக்குமான இடைவெளி கூடிக்கொண்டே இருந்தது. மிக உயரத்தில் இருந்து கங்கையை பார்த்துக்கொண்டே செல்வது புதிய அனுபவத்தை கொடுக்கும், வண்டி வழியில் நிறுத்த, இறங்கி சாலையின் ஓரத்தில் பலமாக கால்ஊன்றி கீழே ஓடும் நதியை பார்க்க ஒரே ஆனந்தம் ஒரு பக்கம் தவறி விழுந்தால் அவ்வளுவுதான் என்ற எண்ணமும் கூட. ஆனால் அதைவிட ஆழமான, அழகான இடங்களை பார்க்கபோகிறேன் என்று அப்பொழுது தெரியவில்லை. பயணம் வெற்றிபெற்றுவிட்டதாக மனது இங்கேயே அறிவித்துவிட்டது.





ரிஷிகேஷை அடுத்து கொஞ்சம் பெரிய ஊர் தேவ்ப்ரயாக், இங்கு தான் பாகிரதி மற்றும் அழக்னண்டா என்ற இரண்டு நதிகள் இணைந்து கங்கையாக மாறுகின்றது. கங்கையாக மாறி தரை பகுதியில் பாயும் முதல் இடம் ரிஷிகேஷ். வண்டியில் அமர்ந்துக்கொண்டே இவற்றை பார்த்துக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தேன் அப்பொழுது இவ்வளவு விபரம் தெரியாது, எனக்கு அருகில் இருந்த பெரியவர் தான்னை அறிமுகபடுதிக்கொண்டு என்னை பற்றி கேட்டு தெரிந்துக்கொண்டார், அவரது மகள் திருமணம் முடிந்து குடும்பத்துடன் பத்ரிநாத் சென்று கொண்டிருப்பதாக கூறினார். அவர்கள் கொண்டுவந்த தின்பண்டங்களை எனக்கு கொடுத்தார் அப்பொழுது வேண்டாம் என்று மறுத்துவிட்டேன்.
(பாகிரதி மற்றும் அழக்னண்டா என்ற இரண்டு நதிகள் இணைந்து கங்கையாக மாறுகின்றது)

அடுத்து வண்டி ஸ்ரீநகர் என்ற ஊரை கடந்தது, மலைமீது அமைந்திருக்கும் பெரிய ஊர் மற்றும் அழகான ஊர், தேவ்ப்ரயாகில் இருந்து முப்பத்திமூன்று கி.மீ ரில் அமைந்துள்ளது இந்த ஊர். தனியாக நான் ஊர்சுற்ற கிளம்பியதால் அலுவலக நண்பன் (வடஇந்திய) அவ்வபோது எங்கு இருக்கிறேன் என்று என் கைதொலைபேசியில் அழைத்து தெரிந்துகொண்டான். உண்மையில் நான் தொலைந்துவிடுவேனோ என்ற பயமாக கூட இருந்திருக்கலாம். ஸ்ரீநகரில் இருந்து முப்பத்திநான்கு கி.மீ ரில் ருத்ரபிரயாக் என்னும் ஊர் வந்தது இங்கிருந்துதான் பத்ரிநாத்துக்கும் கேதர்நாத்துக்கும் இரண்டாக சாலைகள் பிரிகின்றன. அடுத்து கரன்பிரயாக், நன்ட்ப்ரயாக் வழியாக சென்று சமோலியை அடைந்தோம். இந்த ஊர் சமோலி மாவட்டத்தை சேர்ந்திருந்தாலும் மாவட்டத்தின் தலைநகரம் கோபீஸ்வர், சமோலியை கடந்து வண்டி ஜோஷிமத் செல்வதற்குள் இருட்டிவிட்டது (மாலையே வெளிச்சம் மங்கிவிடுகிறது) அங்கு இரவு தங்கிவிட்டு காலையில்தான் செல்லமுடியும் என்று கூறிவிட்டனர், மலைபகுதி என்பதால் பகலில் மட்டுமே பயணம் செய்ய அனுமதிஉண்டு. மற்றநேரங்களில் பாதையை மூடிவிடுகின்றனர். ஆதலால் இரவு அறை எடுத்து தங்கிவிட்டு விடியற்காலை ஆறுமணிக்குள் வண்டி இருக்கும் இடத்துக்கு வந்துவிடுங்கள் என்று ஓட்டுனர் கூறினர், ரிஷிகேசிலிருந்து ஜோஷிமத் வருவதற்கு பத்து முதல் பன்னிரண்டு மணிநேரமாகும், முழுவதும் மலைமீது பயணம்.( வழியில் மண்சரிவு, விபத்து எந்தவண்டிக்கும் நேராதபட்சத்தில்)


ஜோஷிமத்தில் இறங்கியவுடன் வீசிய காற்று சில்லென்று வருட, தொடக்கத்தில் இதமான குளிர் உடலில் பரவ ஒரு வித இன்பம் தொற்றிக்கொண்டது, ஜோஷிமத்தில் ஆதிசங்கரர் தங்கிருந்தாக கூறினர் எதையோ நிறுவியதாக கூட கூறினர், அவருக்கு ஒரு கோவில்கூட இருப்பதாக கூறினர். ஆனால் எனக்கு அந்த நேரத்தில் ஒரு அறை மட்டுமே தேவை என்பதில் கவனம் இருந்தது குளிர் அதிகமாக ஆரம்பித்ததால், பல நல்ல விடுதிகளை கொண்ட ஊர் வருடத்தில் இரண்டு மூன்று மாதங்கள் மட்டுமே நல்ல வருமானம் இருக்கும் என்று தோன்றுகிறது ( வருடத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே பத்ரி, கேதர் போன்ற கோவில்கள் திறந்திருக்கும் மற்ற மாதங்களில் கடும் பனிபொழிவு காரணமாக திறக்கப்படமாட்டாது) நான் சென்ற நேரம் அப்படி, ஒரு விடுதியில் கூட அறை கிடைக்கவில்லை, அதுமட்டும் இல்லாமல் தனியாக சென்றதால் அறை கிடைப்பது கடினமாக இருந்தது, குளிர் வேறு அதிகமாகிக்கொண்டே இருந்தது ஒரு மணி நேரம் அலைந்து எங்கும் தங்க அறை கிடைக்காததால் வண்டி இறக்கிவிட்ட இடத்திற்கே திரும்பி வந்தேன். கோவில் திறந்த முதல் இரண்டு மாதங்கள் பயணம் செய்ய சிறந்த நாட்கள் அடுத்து மழைக்காலம் வருவதால் யாரும் செல்ல விருப்பபடமாட்டார்கள் (மண்சரிவுகள் இருக்கும்) ஆகவே முதல் இரண்டு மாதங்கள் அதிக மக்கள் வருவதால் அறை வாடகை யானைவிலை இருக்கும் அதற்க்கு தயாராக இருந்தாலும் அறை கிடைப்பதில் சிரமம் இருக்கும். இன்னைக்கு சிவராத்திரிதான் குளிரிலேயே கிடக்கவேண்டியதுதான் என்று என்மனதை தயார் படுத்திக்கொண்டேன்.

தேடல் தொடரும்...

குறிப்பு : முதல் புகைப்படத்தை தவிர மற்ற அனைத்தும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது

9 comments:

ஸ்வாமி ஓம்கார் said...

அருமையான தொடர்...

வாழ்த்துக்கள்.

பின்நவீனதுவம் எழுதி எழுதி.. உங்கள் பயண கட்டுரையும் திடீரென நடுவில் துவங்குவது போல இருக்கிறது..கட்டுடைப்பா? :)

//ஆனந்தவிஹார் பேருந்து ,காஷ்மிரிகேட் பேருந்து நிலையம்///

இது எல்லாம் தில்லியில் இருக்கு என எனக்கு தெரியும்.. அனைவருக்கும் தெரியுமா?

//பாகிரதி மற்றும் அழக்னண்டா என்ற இரண்டு நதிகள் இணைந்து கங்கையாக மாறுகின்றது//

தேவ் பிராக் பற்றி சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். படத்தில் இரு நதிகளும் இணையும் இடத்தில் பாறையில் தெரியும் சிகப்பு வட்டம் ஸ்ரீராமர் அமர்ந்து தியானித்த இடம். இந்த நதிகளின் சங்கமத்தில் தான் அவர் உடல் துறந்து வைகுண்டம் சென்றார். ராமரின் கடைசி நாள் இந்த இடத்தில்..

நாலாயிரம் திவ்யபிரபந்தத்தில் இங்கிருக்கும் கோயிலும் பாடபட்டிருக்கிறது. இங்கிருக்கும் ராம்நாத ஸ்வாமி கோவில் ஆதிசங்கரரால் நிர்மாணிக்கபட்டது.
இந்த ஊரில் வசிக்கும் நம்பூதிரிகள் தான் பதிரியில் பூஜை செய்கிறார்கள். பதிரி மூடபட்ட 6 மாதங்கள் இங்கே வந்து வசிப்பார்கள்.

நன்றி.

அறிவிலி said...

நல்லா இருக்கு. ராத்திரி குளிர்ல என்ன பண்ணீங்க?

நிகழ்காலத்தில்... said...

கட்டுரை நல்ல முறையில் வந்துள்ளது

பொருத்தமான அற்புதமான படங்கள்,

தொடருங்கள்

இராகவன் நைஜிரியா said...

நேரில் சென்று பார்ப்பது போல் இருக்கின்றது நண்பரே. அடுத்த இடுகையை எதிர்ப் பார்க்க வைத்துவிட்டீர்கள்.

கோவி.கண்ணன் said...

பயண அனுபவம் சில்லிட வைக்கிறது

Unknown said...

கல்லூரி வாழ்க்கையில் பார்த்த லஷ்மண் ஜூவலா, மீண்டும் படத்தில்
காட்டிய உங்கள் பயணக்கட்டுரை அழகு.

மாதேவி said...

பயணக் கட்டுரை நன்றாக இருக்கிறது.

வினோத் கெளதம் said...

ரொம்ப நல்லா இருக்கு பயண கட்டுரை..
எப்படி இவ்வளோ விஷயங்கள் நியாபகத்தில் இருக்கு..

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி ஸ்வாமி ஓம்கார் ( அடுத்தபதிவுல இருந்து சரி செய்துகொள்கிறேன் -:) தேவ் பிரயாக் பற்றிய தகவலுக்கு ஸ்பெஷல் நன்றி, )

நன்றி அறிவிலி

நன்றி நிகழ்காலத்தில்

நன்றி இராகவன் அண்ணே ( அடுத்தமுறை சிங்கை பக்கம் வாங்க -:)

நன்றி கோவியாரே

நன்றி குமார்

நன்றி மாதேவி

நன்றி வினோத் ( பல நிகழ்வுகள மறந்துவிட்டேன் என்று நான் நினைக்குறேன் :)